கர்நாடகா தேர்தல் முடிந்த உடன் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள்
கர்நாடகா சட்டசபைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 18 காசுகளும் டீசல் விலை 23 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.77.61, டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.79 காசுகள் என நிர்ணயம் செய்யப்
Recommended Video
சென்னை: பெட்ரோல், டீசல் விலை கடந்த 3 வாரங்களுக்குப் பின்னர் ஏற்றம் கண்டுள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு 18 காசுகளும் டீசல் விலை 23 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.77.61, டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.79 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையை விட 18 காசுகளும் பெட்ரோல், டீசல் விலை 23 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதியன்று பெட்ரோல் டீசல் விலை உயர்வு அறிவிக்கப்பட்டது. கடந்த 20 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது.
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மத்திய அரசுக்க எதிரானதாக திரும்பக்கூடும் என்பதாலே, எண்ணைய் நிறுவனங்கள் விலையை மாற்றியமைக்கவில்லை என்று பரவலாக பேசப்பட்டது.
இதனை எண்ணெய் நிறுவனங்கள் மறுத்தன. விலையை உயர்த்தாமலேயே போக்கு காட்டி வந்தன. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை கர்நாடகாவில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த 3 வாரங்களுக்குப் பிறகு இன்று பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் கண்டுள்ளன.
ஒரு லிட்டர் பெட்ரோல், 77 ரூபாய் 43 காசுகளாக இருந்த நிலையில், 18 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. உயர்த்தப்பட்டதன் மூலம், ஒரு லிட்டர் பெட்ரோல் சென்னையில் இன்று ரூ.77.61 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் ஒரு 69 ரூபாய் 56 காசுகளாக இருந்த நிலையில், இன்று 23 காசுகள் உயர்த்தப்பட்டு 69 ரூபாய் 79 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டர் 74 ரூபாய் 80 காசுகளாவும், டீசல் லிட்டர் 65 ரூபாய் 93 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசின் வசம் இருந்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, அந்த அந்த எண்ணை நிறுவனங்கள் வசம் ஒப்படைத்தது. அன்றிலிருந்து பெட்ரோல், டீசல் மீதான விலையை தங்கள் விருப்பம் போல எண்ணை நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றியமைத்து வந்தன.
2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து, பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் அட்சியில் அமர்ந்தது. அன்று முதல் எண்ணை நிறுவனங்கள் மத்திய அரசிடம், 15 நாட்களுக்கு ஒரு முறை விலையை மாற்றியமைத்து வருவது தங்களுக்கு கடுமையான நஷ்டத்தை ஏற்படுத்தி வருவதாக ஒப்பாரி வைத்தன.
கடந்த ஆண்டு ஜூன் 15ம் தேதியன்று தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 65.48 ரூபாய்க்கும், டீசல் 54.93 ரூபாய்க்கும் விற்க்கப்பட்டு வந்தது. தற்போது 10 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 24ம் தேதியன்று டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 74.63 ரூபாய்க்கும், டீசல் 65.93 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி பெட்ரோல் விலை ரூ.79.55 ஆக இருந்தது. இதுவே வரலாறு காணாத உயர்வாகும். இதை நோக்கி பெட்ரோல் விலை வேகமாக உயரத் தொடங்கியது. டீசல் விலை முதல் முறையாக ரூ.70ஐ நெருங்கத் தொடங்கியது. கடந்த ஜனவரி 1ம் தேதி டீசல் விலை ரூ.62.90 ஆக விற்பனை செய்யப்பட்டது.
குஜராத்தில் நடைபெற்ற தேர்தலின்போது, பெட்ரோல், டீசல் விலையை மாற்றாமல், தேர்தல் முடிந்த பின்புதான் விலையை உயர்த்தினர். அதுபோன்ற உத்தியைத்தான், தற்போது கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலுக்கும் அதே உத்தியை பயன்படுத்தி பெட்ரோல் டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைத்தன. தேர்தல் முடிந்த உடன் விலையை அதிரடியாக உயர்த்தி உள்ளன. இனி லோக்சபா தேர்தல் வரை தினம் தினம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்கும். வாகன ஓட்டிகள் பாடுதான் படு திண்டாட்டம்தான்.
பெட்ரோல், டீசல் விற்பனையை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வந்தால் அவற்றின் விலை பாதியாக குறைந்து விடும். ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வந்தால் அரசுக்கு வரி வருவாய் மிக மிகக் குறையும் என்பதால் பல மாநில அரசுகள் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர ஒத்துக்கொள்ளமாட்டார்கள். இப்போது மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து பெட்ரோலுக்கு 100 சதவிகிதத்திற்கும் மேல் வரி வசூலித்து வருகிறார்கள். ஒரு வேளை ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டு வந்து, அதிகபட்ச வரியாக 28% என விதித்தால்கூட பெட்ரோல் விலை பாதியாகக் குறைந்துவிடும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.