திடீர்னு வேலை போயிருச்சா ... உங்க பிஎஃப் பணம் கை கொடுக்கும்!
நீங்க வேலையை விட்டு நின்னுட்டீங்களா? பிஎஃப் கணக்கிலிருந்து 75% தொகையை ஒரே மாதத்தில் எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
டெல்லி: ஊழியர்கள் வேலையில் இருந்து நின்றுவிட்டால் உங்கள் பிஃஎப் கணக்கில் இருந்து ஒரே மாதத்தில் 75% தொகையை எடுத்துக்கொள்ளலாம் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தனியார், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களிடம் பணி புரியும் ஊழியர்கள், அவர்களின் ஓய்வுக் காலத்தை எந்த விதமான நிதிச் சிக்கலும் இல்லாமல் நிம்மதியாக கழிக்கவேண்டும் என்பதற்காக, மாதந்தோறும் அவர்களின் சம்பளத்தில் இருந்து பிஎஃப் என்னும் வருங்கால வைப்பு நிதியாக குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்வதுண்டு. இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் பிஎஃப் தொகையில் இருந்து ஊழியர்கள் தங்களுக்கு தேவைப்படும் சமயங்களில் 75 சதவிகிதம் வரையிலும் கடனாகப் பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுவதுண்டு.

நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் பணியில் இருந்து திடீர் என்று நின்றுவிட்டாலோ, அல்லது நிறுவனமே எந்தவிதமான முன்னறிவிப்பும் செய்யாமல் ஊழியர்களை வேலையில் இருந்து நிறுத்திவிட்டாலோ, அடுத்து வரும் நாட்களில் அன்றாட செலவுகளுக்கு திண்டாட வேண்டியிருக்கும். இந்த இக்கட்டான சமயங்களில் ஊழியர்களுக்கு கைகொடுப்பது அவர்கள் முன்னரே சேர்த்து வைத்த பிஎஃப் பணம்தான்.
ஊழியர்கள் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டாலோ அல்லது பணியில் இருந்து நின்று விட்டாலோ, பிஎஃப் பணத்தை உடனடியாக எடுத்து பயன்படுத்த முடியாது. அவர்கள் பணியில் இருந்து நின்ற தேதியிலிருந்து 2 மாதங்களுக்கு பின்புதான் பிஎஃப் தொகையை பெற்றுக்கொள்ள முடியும். அவர்கள் வேறு வேலைக்கு செல்லும் வரையிலும் அன்றாடச் செலவுகளுக்கு திண்டாட வேண்டியிருக்கும். இந்த இடைப்பட்ட காலங்களுக்கு தேவையான நிதித்தேவைக்கு வெளியிடங்களில் தான் கடன் வாங்க முடியும்.
வேலையில் இருந்து நின்றுவிட்ட ஊழியர்கள், இனிமேல் இந்தவிதமான சிரமங்களை எல்லாம் மேற்கொள்ளவேண்டிய அவசியம் கிடையாது. ஊழியர்கள் வேலையில் இருந்து நின்ற தேதியில் இருந்து ஒரு மாதம் ஆன உடனேயே, தங்களின் பிஎஃப் கணக்கில் இருந்து 75 சதவிதிம் வரையிலும் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
கடந்த ஜூன் மாதம் 26ஆம் தேதி நடைபெற்ற வருங்கால வைப்பு நிதிக் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டதாக தெரிகிறது. இதுபற்றிய முறையான அறிவிப்பை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் இன்று லோக்சபாவில் கேள்வி நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார்.
அதே சமயத்தில் திருமணத்திற்காக வேலையை விட்டு செல்லும் பெண்களுக்கு இந் விதி முறைகள் பொருந்தாது என்றும் கங்வார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications