நிற்காமல் சரியும் தங்கம்! நிலையாக நிற்கும் வெள்ளி! 2 வாரத்தில் எல்லாமே மாறிடுச்சு! இப்போ என்ன செய்யணும்
சென்னை: நமது நாட்டில் தங்கத்தை எப்போதும் முதலீட்டிற்காக மக்கள் வாங்கி வைப்பார்கள். ஆனால், கடந்த இரண்டு வாரங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. மறுபுறம் வெள்ளி விலை நிலையாகவே இருக்கிறது. இதனால் பொதுமக்களில் பலரும் ஏன் வெள்ளியில் முதலீடு செய்யக்கூடாது என யோசிக்க ஆரம்பித்துள்ளனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தாண்டு தொடக்கம் முதல் இப்போது வரை மட்டும் தங்கம் விலை ஏற்கனவே 30%க்கு மேல் உயர்ந்துவிட்டது. இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் ஈரான் மோதல் வெடித்தது. இதனால் தங்கம் விலை மேலும் உயரும் என்றே மக்கள் கருதினர். ஆனால், நிலைமை அதற்கு நேர்மாறாக போய்விட்டது.

தங்கம் விலை
ஆனால் கடந்த இரண்டு வாரங்களில் தங்கம் விலை பயங்கரமாகச் சரிந்துள்ளது. கடந்த ஜூன் 14ம் தேதி தங்கம் விலை ஒரு சவரன் அதிகபட்சமாக 74,560 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதற்கு மறுநாளான ஞாயிற்றுக்கிழமையும் அதே விலையில் இருந்தது. பிறகு இஸ்ரேல் ஈரான் போர் நடக்கும்போது ஏற்றம் இறக்கம் என மாறி மாறியே இருந்தது.
இஸ்ரேல் ஈரான் மோதல் சமயத்தில் தங்கம் விலை பெரியளவில் உயரும் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், அதற்கு நேர்மாறாகவே தங்கம் விலை இருந்தது. தங்கம் விலை பெரியளவில் உயராமலேயே இருந்தது. ஈரான் மீது அமெரிக்கா குண்டு போட்ட போதும் கூட தங்கம் விலை பெரியளவில் உயரவில்லை. அதேநேரம் போர் முடிவுக்கு வந்தவுடன் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
சரியும் தங்கம் விலை
சுமார் 15 நாட்களுக்கு முன்பு, அதாவது ஜூன் 14ல் ஒரு சவரன் தங்கம் 74,560 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இப்போது அது 71,440 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதிலும் குறிப்பாகக் கடந்த 10 நாட்களில் இரண்டே இரண்டு நாட்கள் மட்டுமே தங்கம் விலை உயர்ந்திருக்கிறது. இரு நாட்கள் விலையில் மாற்றம் இல்லாத நிலையில், மற்ற 6 நாட்கள் விலை சரிந்துள்ளது. 15 நாட்களில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு 2680 ரூபாய் குறைந்துள்ளது.
நிலையாக நிற்கும் வெள்ளி விலை
மறுபுறம் வெள்ளி விலை அந்தளவுக்குச் சரியவில்லை. அதே ஜூன் 14ம் தேதி சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.120ஆக இருந்தது. அதாவது ஒரு கிலோ ரூ.1.2 லட்சமாக இருந்தது. இஸ்ரேல் ஈரான் மோதல் உச்சத்திற்குப் போன போது ஜூன் 18, 19 தேதிகளில் மட்டும் வெள்ளி விலை ரூ.1.22 லட்சமாக உயர்ந்தது. அதன் பிறகு நிலையாகவே இருந்து வந்தது. இப்போது 15 நாட்கள் கழித்து வெள்ளி விலை கிராமுக்கு ரூ.118ஆக இருக்கிறது. அதாவது ஒரு கிலோ வெள்ளி ரூ.1.1 லட்சமாகவே இருக்கிறது.
அதாவது கடந்த இரண்டு வாரங்களில் தங்கம் விலை கணிசமாகச் சரிந்துள்ளது. அதேநேரம் வெள்ளி விலை பெரிய மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது. வரும் காலத்திலும் தங்கம் விலை குறைந்து, வெள்ளி விலை நிலையாக இருக்கும் என மக்கள் கருதுகிறார்கள். இதனால் மக்களில் சிலர் வெள்ளியில் முதலீடு செய்யவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
சிக்கல் இருக்கு
அதேநேரம் வெள்ளியில் முதலீடு என்பது சிக்கலானது என்கிறார்கள் வல்லுநர்கள். வெள்ளியை எளிதாகப் பணமாக்க முடியாது. வெள்ளியின் விலை இப்போது நிலையாக இருந்தாலும் அது குறுகிய காலத்தில் மிகப் பெரியளவில் வீழ்ச்சி அடையவும் வாய்ப்பு இருப்பதாகவே ஆனந்த் சீனிவாசன் உள்ளிட்டோர் எச்சரிக்கிறார்கள். இதனால் வெள்ளியில் பணம் போடலாமா என யோசிக்கும் முன்பு கவனம் தேவை!
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications