ஜிஎஸ்டியில் தங்கத்திற்கு 3% வரி - சட்டவிரோத விற்பனை, கடத்தல் அதிகரிக்கும்
ஜிஎஸ்டியில் தங்கத்திற்கு 3%வரி விதிக்கப்பட்டதால் சட்டவிரோத விற்பனைக்கும் கடத்தலுக்கும் வழிவகுக்கும் என்று நகை விற்பனையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மும்பை: சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பின் கீழ் தங்கத்திற்கு 3 சதவிகித வரி விதிக்கப்பட்டதால் சட்டவிரோத விற்பனைக்கும் கடத்தலுக்கும் வழிவகுக்கும் என்று தங்க நகை விற்பனையாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்தியாவில் தங்கத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் விற்பனையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக சுமார் 800 டன் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.
நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவில் தங்கத்தின் பயன்பாடு உத்தேசமாக 750 டன்னாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிற்து. இதனால் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றது.

தங்கநகை விற்பனை
இந்தியா முழுவதும் சுமார் 3 லட்சத்து 85 ஆயிரம் தங்க நகை விற்பனையாளர்கள் உள்ளனர். இந்தியாவில் தங்கத்திற்கு கடந்த ஜூன் மாதம் வரையிலும் 1.2 சதவிகிதம் வாட் விற்பனை வரி வசூலிக்கப்பட்டு வந்தது.

சரக்கு மற்றும் சேவை வரி
இந்நிலையில் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறையானது நாடு முழுவதும் அமலுக்கு வந்தது, இதில் தங்கத்திற்கு 3 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டதால் தங்க நகை விற்பனையாளர்களும் பொது மக்களும் அதிர்ச்சியடைந்தனர்.

நகை விலை உயர்வு
இதனால், கடந்த ஜூன் 30ம் தேதி அன்றே பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரொக்கத்திற்கும் கடன் வாங்கியும் நகைகளை வாங்கி விட்டனர். இதனால் ஒரே நாளில் தங்கத்தின் விற்பனை அதிரடியாக உயர்ந்தது.

3 சதவிகித வரி
இது பற்றி கருத்து கூறிய இந்தியாவின் மிகப்பெரிய தங்க நகை விற்பனை சந்தையான ஜாவேரி பஜாரில் தங்க நகையை வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர்,'நான் கடந்த 2ம் தேதி விற்பனை ரசீது இல்லாமல் தான் நகை வாங்கினேன். இதற்காக நான் எந்த ஒரு ஆதாரத்தையும் தரவில்லை. நான் ஏன் 3 சதவிகிதம் வரியை அதிகமாக பணம் கொடுத்து நகை வாங்க வேண்டும்' என்று கேட்கிறார்.

விற்பனை பாதிப்பு
சிறிய நகை வியாபாரிகள் விற்பனை ரசீது இல்லாமல் சுலபமாக நகை விற்பனை செய்கின்றனர். ஆனால், அதே சமயம் மிகப்பெரிய அளவில் நகைக்கடைகள் வைத்திருக்கும் நகை வியாபாரிகள் அரசின் சட்டதிட்டத்தின் படி விற்பனை செய்வதால் அவர்களின் விற்பனை கடுமையாக பாதிக்கப்படுகின்றது என்றார் கொல்கத்தாவில் மொத்த நகை வியாபாரம் செய்யும் ஹர்ஷத் அஜ்மீரா என்பவர்.

கள்ள விற்பனை அதிகரிக்கும்
மேலும் அவர் கூறுகையில், வாடிக்கையாளர்கள் வெறும் 1 சதவிகிதத்திற்காக விற்பனை ரசீது இல்லாமல் நகை வாங்கிக் கொண்டனர். மேலும், 3 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிப்பால் வாடிக்கையாளர்கள் பெரும்பாலோனர் மிகச்சிறிய நகைக் கடைகளில் விற்பனை ரசீது இல்லாமல் வாங்கும் அதிகரிக்கவே செய்யும் என்றார்.

தங்கக்கடத்தல் அதிகரிக்கும்
இந்த வரி உயர்வானது, கள்ளத்தனமாக நகை விற்பனை செய்வதற்கும், வெளி நாடுகளில் இருந்து கடத்துவதற்கும் ஊக்கம் அளிப்பதாகவே இருக்கும் என்பதே பெரும்பாலான நகை வியாபாரிகளின் ஆதங்கமாகும்.

120 டன் தங்கம்
இதனை உறுதி செய்வதுபோல், கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 120டன் தங்கம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்டதாக உலக தங்க கவுன்சில் மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications