தங்கமயில், கல்யாண், டைட்டன்: தங்க நகை கடைகள் கண்ணீர்.. மோடியின் 2வது ஷாக்.. இனி கதை அவ்வளவு தானா?!
சென்னை: மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ளதால், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள தங்க நகை கடை நிறுவனங்களின் பங்குகள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. புதன்கிழமை பங்குச் சந்தையில் ஏற்பட்ட இந்த அதிரடி சரிவு, முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு அந்நிய செலாவணியை சேமிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாலும், இது இந்திய நகைத் துறையின் வளர்ச்சியையும், வர்த்தகத்தையும் பெரிய அளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்குகள் கடும் வீழ்ச்சி
மோடியின் ஞாயிற்றுக்கிழமை பேச்சில் துவங்கி இன்று பங்குச் சந்தையில் 3வது நாளாக தொடர்ந்த சரிவில், கல்யாண் ஜுவல்லர்ஸ் இந்தியா, பி.சி. ஜுவல்லர், பி.என். காட்கில் ஜுவல்லர்ஸ், சென்கோ கோல்ட், தங்கமயில் ஜுவல்லரி மற்றும் டைட்டன் கம்பெனி உள்ளிட்ட முக்கிய நகை நிறுவனங்களின் பங்குகள் 6 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன.
குறிப்பாக டைட்டன், கல்யாண் ஜுவல்லர்ஸ் மற்றும் சென்கோ கோல்ட் ஆகியவை கடந்த இரண்டு வர்த்தக நாட்களில் 11 முதல் 15 சதவீதம் வரை இழந்துள்ளன. இந்த சரிவால் 3 நகை கடை நிறுவனங்களின் சந்தை மதிப்பு மொத்தம் 50,000 கோடி ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குகள் 5.42 சதவீதம் சரிந்து அதன் பங்கு விலை 340.35 ரூபாய் என்ற குறைந்த விலையை அடைந்துள்ளது. இதை தொடர்ந்து பி.சி. ஜுவல்லர் பங்குகள் சரிவில் இருந்து மீண்டு 0.12 சதவீத உயர்வில் உள்ளது, பி.என். காட்கில் ஜுவல்லர்ஸ் பங்குகள் 1.55 சதவீதம் சரிந்தது, சென்கோ கோல்ட் பங்குகள் 0.21 சதவீதம் உயர்ந்தது, தங்கமயில் ஜுவல்லரி பங்குகள் 5.25 சதவீதம் வரை சரிந்தது மற்றும் டைட்டன் கம்பெனி பங்குகள் 1 சதவீதம் மேல் சரிந்தது.

அரசின் வரி உயர்வு
மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கு 10 சதவீத அடிப்படை சுங்க வரியுடன் 5 சதவீத விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி (AIDC) விதித்துள்ளது. இதனால் மொத்த வரி 15 சதவீதமாக உயர்ந்துள்ளது. பிளாட்டினம் இறக்குமதிக்கும் இதேபோன்ற மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு தங்கம்-வெள்ளி டோர், நாணயங்கள் உள்ளிட்ட தொடர்புடைய பொருட்களுக்கும் பொருந்தும். இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
மோடியின் வேண்டுகோள் மற்றும் வரி உயர்வு தாக்கம்
பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு காலம் தள்ளிப் போடுமாறு வேண்டுகோள் விடுத்த சில நாட்களுக்குப் பிறகு இந்த வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நடவடிக்கைகளும் சேர்ந்து தங்கம் விலையை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி அரசின் இன்றைய வரி உயர்வு அறிவிப்பால் தங்கம் இப்போது கிலோவுக்கு 12 லட்சம் ரூபாய் அதிகமாகவும், வெள்ளி 22,000 ரூபாய் அதிகமாகவும் விலை உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது நகை வாங்கும் பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும்.
முதலீட்டாளர்களுக்கு நிபுணர் ஆலோசனை
ஏஞ்சல் ஒன் நிறுவனத்தின் ஈக்விட்டி டெக்னிக்கல் மற்றும் டெரிவேட்டிவ் அனலிஸ்ட் ராஜேஷ் போஸலே கூறுகையில், "பிரதமர் மோடியின் தங்கம் தொடர்பான வேண்டுகோளுக்குப் பிறகு நகை கடை பங்குகள் தொடர்ந்து சரிந்து வந்தன. தற்போது வரி உயர்வு அறிவிப்பு கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நகை வர்த்தகத்திற்கு சாதகமான காலம் வரும் வரையிலும் இந்த சரிவு தொடரலாம்" என்று தெரிவித்தார்.
"இதனால் முதலீட்டாளர்கள் இந்தத் துறையில் அதிகப்படியான முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும். ஆனால் எதிர்காலத்தில் சாதகமான தகவல் வந்தால் டைட்டன் கம்பெனி மற்றும் சென்கோ கோல்ட் போன்ற பங்குகள் சிறப்பாக செயல்படக்கூடும்" என்று அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த வரி உயர்வு மற்றும் பங்குச் சந்தை சரிவு இந்திய நகைத் துறையின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கம் மற்றும் நகை வாங்கும் போது தற்போதைய சந்தை நிலவரத்தை கவனமாக கண்காணித்து முடிவு எடுக்க வேண்டும். அரசின் இந்த நடவடிக்கை நாட்டின் அந்நிய செலாவணியை பாதுகாக்க உதவும் என்றாலும், மக்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுத்தும் காரணியால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது.












Click it and Unblock the Notifications