தொட்டது எல்லாம் தங்கமாகும் மார்வாரி குடும்பங்களின் 'சக்சஸ் பார்முலா' இதுதான்.. 12 X 3 பாலோ பண்ணுங்க!
இந்திய வர்த்தக சந்தையில் சில சமூகங்கள் காலம் காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது, அதில் முக்கியமாக மார்வாரி குடும்பங்கள் முதன்மையாக உள்ளது. இவர்களின் வெற்றிக்கு பின்னால் பல காரணங்கள் கூறப்பட்டாலும், அடிப்படையாக பாலோ செய்யும் சில பார்முலா தான் இவர்களின் வெற்றிக்கு மூலதனமாக அமைகிறது. அது தான் 1000 நாள் பார்முலா.
மார்வாரி குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே இந்த ஒரு சக்திவாய்ந்த பார்முலா-வை கற்றுக்கொடுக்கிறார்கள். இது குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே செல்வம் உருவாக்கும் சரியான மனநிலையை வளர்க்க உதவுகிறது. இந்த விதியால் இளைஞர்கள் தொழில் முனைவோராக மாறி, நல்ல வியாபாரிகளாக உருவாகி, பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்களையும் கட்டமைக்க முடிகிறது என நம்பப்படுகிறது. இது வியாபாரம் துவங்கும் அனைவருக்கும் முக்கிய வழிகாட்டியாக இருக்கிறது.

1000 நாள் விதி என்றால் என்ன?
மார்வாரிகளின் இந்த விதி மிகவும் எளிமையானது, ஒரு வியாபாரம் நிலையாக லாபம் தர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 1000 நாட்கள், அதாவது சுமார் மூன்று ஆண்டுகள் தேவைப்படும் என்று சொல்கிறது. இந்த காலகட்டம் முடியும் வரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். இதேவேளையில் இந்த 1000 நாட்களை மூன்று பகுதிகளாக பிரித்து, ஒவ்வொரு கட்டத்திலும் வியாபாரத்தின் நோக்கத்தை தெளிவாக வகுக்கப்பட்டு உள்ளது.
இந்த விதி, வியாபாரத்தை தொடங்கும் முன் அல்லது நடுவில் விட்டுவிட நினைக்கும் போது, நம்மை சிந்திக்க வைக்கிறது. நேரம், உழைப்பு, படிப்பினைகள் ஆகியவை சேர்ந்து லாபம் கிடைத்து, வர்த்தகம் மற்றும் முதலீட்டு மதிப்பு பெருகும் வரை பொறுமையாக இருக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறது.
முதல் 6 முதல் 12 மாதங்கள்
வியாபாரத்தின் முதல் ஆறு முதல் பன்னிரண்டு மாதங்கள் வரை லாபம் பார்க்கும் எண்ணத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். இந்த காலத்தில் முழு கவனமும் தொழில் துறையை புரிந்துகொள்வதிலும், தினசரி கற்றுக்கொண்டவற்றின் அடிப்படையில் வியாபார மாடலை மேம்படுத்துவதிலும் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் சிறு சிறு மாற்றங்களை செய்து, வர்த்தகத்தை சிறப்பாக்க வேண்டும்.
இது ஒரு விதையை நட்டு, அதன் வேர்களை வளர்க்கும் காலம் போன்றது. இக்காலக்கட்டத்தில் லாபம் வராததால் ஏமாற்றமடையாமல், தொழிலின் நுணுக்கங்களை அதாவது வாடிக்கையாளர் தேவைகள், சந்தை போக்குகள், போட்டியாளர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இந்த அடித்தளம் உறுதியாக இருந்தால் தான் பின்னர் வியாபாரம் வலுவாக நிற்கும்.
12 முதல் 24 மாதங்கள்
இரண்டாவது ஆண்டில், அதாவது 12 முதல் 24 மாதங்கள் வரை, வியாபாரம் பெரிதாக வளராமல் இருக்கும் காலம். இக்காலக்கட்டத்தில் வெற்றிக்கு பதிலாக மந்தமான காலக்கட்டமாக இருக்கும். இக்காலக்கட்டத்தில் வர்த்தகத்தை எப்படி காப்பாற்றி அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளும் காலம்.
விற்பனை அதிகமில்லாத நாட்களிலும், வாடிக்கையாளர்களிடமிருந்து எதிர்பார்த்த வரவேற்பு இல்லாத போதும், தொடர்ந்து முயற்சி செய்யும் திறன் நம்மிடம் இருக்கிறதா என்பதை 2வது 12 மாதத்தில் சோதிக்கும். இக்காலக்கட்டத்தில் சிறிய வருமானத்தை கொண்டு வியாபாரத்தை தொடரவும், செலவுகளை குறைத்து எளிய வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.
இந்த கட்டத்தில் பொறுமை மிக முக்கியம். பலர் இங்கு தான் தோற்று விடுகிறார்கள். ஆனால் மார்வாரி விதியின்படி, இந்த கஷ்டமான நாட்களை தாங்கி நிற்பவர்களுக்கு தான் அடுத்த கட்ட வெற்றி காத்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இது ஒரு மரத்தை பராமரிப்பது போல - பழம் வரும் வரை தண்ணீர் ஊற்றி காத்திருப்பது.
24 முதல் 36 மாதங்கள்
மூன்றாவது ஆண்டில், 24 முதல் 36 மாதங்கள் வரை, வியாபாரத்தை திறம்பட நடத்தும் நேரம். இங்கு செலவுகளை குறைத்து திறனை அதிகரிக்க வேண்டும். வியாபாரத்தை சீராக நடத்தும் அமைப்புகளை உருவாக்கி, சரியான குழுவை அமைக்க வேண்டும். ஒவ்வொரு பணியையும் திட்டமிட்டு செயல்படுத்த, செயல்முறைகளை எளிமையாக்க வேண்டும்.
இந்த கட்டத்தில் தான் வியாபாரம் தானாக இயங்கும் வலிமை பெறுகிறது. இதுவரை கற்றுக்கொண்ட அனைத்தையும் ஒன்றிணைத்து, நிலையான அடித்தளத்தை உருவாக்கும் காலம் இது. இந்த முயற்சிகள் வெற்றிகரமாக இருந்தால் தான் வியாபாரம் லாபத்தை தர துவங்கும். இதேபோல் இந்த காலக்கட்டத்தில் நீங்கள் செய்யப்போகும் மாற்றங்கள் தான் இனி வரும் காலத்திற்கு தொடர்ந்து லாபத்தையும், பணமழையும் பெற வழிவகுக்கும்.
வெற்றிக்கு 1000 நாட்கள் தேவை
மார்வாரி விதியின்படி, ஒரு வியாபாரத்தை வெற்றி அல்லது தோல்வி என்று முத்திரைகுத்த குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் கொடுக்க வேண்டும் என சொல்கிறது. பல இளைஞர்கள் முதல் சில மாதங்களிலேயே ஏமாற்றமடைந்து வியாபாரத்தை கைவிடுகிறார்கள்.
ஆனால் 1000 நாள் விதி நமக்கு நினைவூட்டுவது என்னவென்றால் பொறுமை இருந்தால் தான் உண்மையான வளர்ச்சி வரும். தொழில் தொடங்க நினைப்பவர்களோ, நடுவில் விட்டுவிடலாம் என்று யோசிப்பவர்களோ, தங்களை கேட்டுக்கொள்ள வேண்டிய விஷயம் 1000 நாட்கள் நாம் செய்யும் தொழிலுக்கு உண்மையாக இருக்கிறோமா என்பது தான்.
இன்றைய டிஜிட்டல் மயமான வாழ்க்கை முறையில், பல்வேறு உதவிகள் கிடைக்கும் காரணத்தாலும் இந்த 1000 நாட்களை என்பதை நீங்கள் 500 நாட்கள் என்ற அளவில் கூட குறைத்துக்கொள்ளலாம். ஆனால் டிஜிட்டல் சமுக வலைத்தளம் மூலம் கிடைக்கும் வெற்றி நிலையான வர்த்தக மாடலாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய இந்த 1000 நாட்கள் பார்முலா தான் சரியானதாக இருக்கும்.
1000 நாள் விதி இன்றும் பல மார்வாரி குடும்பங்களில் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கப்படும் அடிப்படை பாடம் இது. புதிதாக தொழில் துவங்க நீங்கள் திட்டமிட்டால் இந்த பார்முலா-வை உறுதியுடன் கடைப்பிடித்து பாருங்கள் கட்டாயம் வெற்றி கிடைக்கும்.















Click it and Unblock the Notifications