தை பிறந்தால் வழி பிறக்கும் சொல்லுவாங்க.. அது ஓகே, தங்கம் விலை குறையுமா! மிக முக்கியமான தகவல்
சென்னை: தங்கம் விலை இந்தாண்டாவது குறையுமா என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கும் வகையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. பொதுவாக தை பிறந்தால் வழி பிறக்கும் எனச் சொல்வார்கள். இப்போது தை பிறந்துவிட்ட நிலையில், வழி பிறந்து தங்கம் விலை குறைய வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
இந்தியாவில் எப்போதுமே தங்கம் தான் மக்களுக்குப் பிரதானச் சேமிப்பாக இருந்துள்ளது. நமது வீட்டிலேயே கூட தாத்தா- பாட்டி, அப்பா- அம்மா தங்கத்தை தான் வாங்கி வைப்பார்கள். அவர்கள் தங்கத்தைக் கலாச்சாரம் என்பதைத் தாண்டி பிரதான முதலீடாகக் கருதியதே இதற்கு முக்கிய காரணமாகும். இந்த தலைமுறையினர் இடையில் சில காலம் விலை ஏறாததால் தங்கம் வாங்கப் பெரிய ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.

மொத்தமாக மாறிடுச்சு
ஆனால், கொரோனா வந்த பிறகு நிலைமை மொத்தமாக மாறியது. தங்கம் விலை ராக்கெட்டில் ஏறியது போலத் தொடர்ந்து உயர்ந்து வந்தது. அவ்வப்போது லேசாக ஸ்பீட் பிரேக்கரில் ஏறுவது போலத் தங்கம் விலை ஸ்லோ ஆனாலும் கூட ஏறி இறங்கிய பிறகு அது முழு வீச்சில் உச்சத்திற்குச் செல்வதே தொடர்கதையாக இருந்து வருகிறது.
அப்படித் தான் வரலாற்றில் இல்லாத அளவுக்குக் கடந்தாண்டு தங்கம் விலை உச்சத்திற்குப் போனது. சரி, கடந்தாண்டு தான் அப்படிப் போய்விட்டது.. இந்தாண்டாவது தங்கம் விலை ஓரளவுக்குக் குறையுமோ எனப் பொதுமக்கள் எதிர்பார்த்தனர். அதற்கேற்பக் கடந்தாண்டு இறுதியில் சில நாட்கள் தங்கம் விலை பெரியளவில் சரிந்தது. சரி, இதே நிலை தான் நீடிக்கும் என நினைத்த மக்களுக்குப் பெரிய ஆப்பு கிடைத்தது.
ஒவ்வொரு நாளும் உச்சம்
தங்கம் விலை இந்தாண்டும் கூட தொடக்கம் முதலே உச்சம் தொட்டு வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மார்கெட் இல்லை. ஆனால், அதற்கு முந்தைய நாள் சனிக்கிழமை கூட தங்கம் விலை உயர்ந்தது. கடந்த சனிக்கிழமை தங்கம் கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் அதிகரித்து 13,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.. அதாவது ஒரு சவரன் 1,06,240 ரூபாய்க்கு விற்பனையானது.
தங்கம் விலை உயர்ந்தே வரும் நிலையில், விலை குறையக் கொஞ்சமாவது வாய்ப்பு இருக்கிறதா என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. பொதுவாக தை பிறந்தால் வழி பிறக்கும் எனச் சொல்வார்கள். கடந்த வாரம் தான் தை மாதம் பிறந்த நிலையில், நாமும் பொங்கலை கோலாகலமாகக் கொண்டாடினோம். ஆனால், தங்கம் விலை குறையத் தங்கம் வாய்ப்பாக அமையுமா என்றால் அதை உறுதியாகச் சொல்ல முடியாது.
காரணங்கள்
சர்வதேச நிலைமையைப் பொறுத்தே எப்போதும் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படும். இப்போது ஒரு பக்கம் மத்திய கிழக்கில் ஈரானில் அமைதியின்மை தொடர்கிறது. அங்கு எப்போது குழப்பம் முடியும் என்பது தெரியவில்லை. அதேபோல ரஷ்யா- உக்ரைன் போரும் கூட பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. அதை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகள் எதற்கும் பலன் இல்லை!
எல்லாவற்றையும் விட கிரீன்லாந்து விவகாரத்தில் டிரம்ப் பேசும் பேச்சும் நடத்தையும் நிலைமையைப் பதற்றமாகவே ஆக்குகிறது. அமெரிக்காவுக்கு கிரீன்லாந்து வேண்டும் என அடம்பிடிக்கும் டிரம்ப், இதற்காக ராணுவத்தை கூட பயன்படுத்துவேன் என்றே சொல்லி வருகிறார். அது மட்டுமின்றி அமெரிக்காவின் இந்த திட்டத்தை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு 10% வரியையும் அறிவித்துள்ளார். இது போன்ற சூழல்கள் நிலைமையை மோசமாகவே மாற்றுகிறது.
வழி பிறக்குமா?
ஆனால், ஒரு நல்ல விஷயம் இருக்கிறது. மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 2% வரை குறைக்க வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகத் தங்கம் விலை ஓரளவுக்குக் குறையும் என்றே கூறப்படுகிறது. தை பிறந்துவிட்ட நிலையில், வழி பிறந்து விலையும் குறைந்தால் அதைவிட மக்களுக்குச் சந்தோஷம் எதுவுமில்லை!












Click it and Unblock the Notifications