மத்திய பட்ஜெட் 2018: சந்தோஷ மூடில் ஜெட்லி... மாற்றத்திற்கான பட்ஜெட்டை தருவாரா?
எதிர்பார்க்கப்பட்டதை விட 18 சதவிகிதம் கூடுதலாக முன்கூட்டி செலுத்திய வரி வசூலால் (Advance Tax) வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் ஜிஎஸ்டியின் தாக்கம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
Recommended Video
டெல்லி: ஜிஎஸ்டி வரியானது எதிர்பார்த்ததை விட கூடுதலான இலக்கை எட்டி உள்ளது. எனவே இதுவும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு கூடுதல் சந்தோசத்தை அளித்துள்ளது. எனவே இந்த பட்ஜெட்டில் தான் செயல்படுத்த நினைத்த மாற்றங்களை கண்டிப்பாக செயல்படுத்துவார் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு இன்னும் இரு வாரங்களே உள்ளன. பட்ஜெட் பற்றிய காய்ச்சல் மண்டை வலியானது இப்போதே பாமரன் முதல் கோடீஸ்வர் வரையிலும், சாதாரண பெட்டிக்கடைக்காரர் முதல் பெரும் தொழில் நிறுவனங்கள் வரையிலும் ஆட்டிப்படைக்க ஆரம்பித்து விட்டது.
சில தொலைக்காட்சி ஊடகங்களும் இப்போதே பட்ஜெட் பற்றிய விவாதாங்களை ஆரம்பித்துவிட்டன.
தெருமுனை டீக்கடையில் உட்கார்ந்து கொண்டு டீ குடிப்பவர்கள்கூட இந்த வருட பட்ஜெட்டில் டீக்கு வரியை ஏத்துவாய்ங்களோ இல்லை தம்முக்கு வரியை எறக்குவாய்ங்களோ என்று டெல்லி லெவலுக்கு இவர்களும் விவாதிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
பட்ஜெட் விவாதங்கள்
இவர்கள் இப்படி இருக்க, மாதச் சம்பளம் வாங்குபவர்களோ, ஐயையோ பட்ஜெட் வரப்போகுதோ, இந்த பட்ஜெட்டில் 80சி வரி விலக்கு பிரிவில் ஒன்றரை லட்சத்துக்கு பதில் இரண்டு லட்சமா ஆக்குவாய்ங்களோ, வரி விலக்கு உச்ச வரம்பை இரண்டரை லட்சத்துக்கு பதில் நான்கு லட்சமா கூட்டுவாய்ங்களோ என்று விவாதிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
ஜிஎஸ்டி வரி
இவர்கள் இப்படி நினைத்துக்கொண்டிருக்க மத்திய நிதி அமைச்சர் ஜெட்லியோ ஏக குஷியில் இருக்கிறார். இருக்காதா பின்னே! சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு என்னும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை கடந்த ஆண்டு ஜூலை முதல் அமல்படுத்தப்பட்ட பின்பு நாட்டில் ஜிஎஸ்டி வரி வசூல் அமோகமாக இருக்கிறது.
சந்தோசத்தில் ஜெட்லி
அதுபோலவே, முன்கூட்டி செலுத்திய வரி (Advance Tax) வசூலானது கடந்த ஆண்டை விட 18 சதவிகிதம் அதிகமாகும். இது இந்த நிநி ஆண்டின் முழுவதும் வசூலிக்க உத்தேசித்த தொகையில் சுமார் மூன்றில் இரண்டு மடங்காகும். இதனால் மத்திய நிதி அமைச்சர் ஜெட்லி சந்தோசத்தில் திளைக்கிறார்.
காத்திருக்கும் சம்பளதாரர்கள்
இதனால், வரவிருக்கும் பட்ஜெட்டில் நிச்சயம் மாத சம்பளதாரர்களுக்கு நிறைய சலுகைகளை அறிப்பார் என்று அவர்கள் ஆவலுடன் காத்துக் கிடக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை ஜெட்லி பூர்த்தி செய்வாரா என்று தெரியவில்லை. ஏனென்றால் கடந்த பட்ஜெட்டிலேயே சில மாற்றங்களை செய்ய நினைத்து ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்படுவதை முன்னிறுத்தி அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டார்.
அருண் ஜெட்லி சஸ்பென்ஸ்
ஜிஎஸ்டி வரியானது எதிர்பார்த்ததை விட கூடுதலான இலக்கை எட்டி உள்ளது. எனவே இதுவும் நிதி அமைச்சருக்கு கூடுதல் சந்தோசத்தை அளித்துள்ளது. எனவே இந்த பட்ஜெட்டில் தான் செயல்படுத்த நினைத்த மாற்றங்களை கண்டிப்பாக செயல்படுத்துவார் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
பட்ஜெட் சஸ்பென்ஸ்
இவர்களின் எதிர்பார்ப்புகளை ஜெட்லி பூர்த்தி செய்வாரா என்று இன்னும் இருபது நாட்கள் பொறுத்திருந்து ஜெட்லி வைத்திருக்கும் பிரீஃப் கேசை திறந்து பார்த்தால் தெரிந்துவிடும். அதுவரையில் நாம் சற்று பொறுமையுடன் பிரசவத்திற்கு மனைவியை மருத்துவ அனுமதித்துவிட்டு வெளியில் நகத்தை கடித்துக்கொண்டு காத்திருப்பதைப் போல காத்திருப்போம். நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.