இனிமேல் எங்களை உரசினால் பதிலடி கடுமையாக இருக்கும்.. பிரதமர் மோடி எச்சரிக்கை
சண்டிகர்: பஞ்சாப்பில் உள்ள ஆதம்பூர் விமானப்படைத் தளத்தில் அங்குப் பாதுகாப்புப் படை வீரர்களிடையே உரையாற்றினார். இனி மேல் எல்லை மீறினால் பதிலடி வலிமையாக இருக்கும் எனப் பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், இந்த வெற்றியை எல்லையைப் பாதுகாக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூரில் பஞ்சாப்பில் உள்ள ஆதம்பூர் விமானப்படைத் தளம் மிக முக்கிய பங்கு வகித்தது. இன்று திடீரென அந்த முகாமிற்குச் சென்ற பிரதமர் மோடி, அங்குப் பாதுகாப்புப் படை வீரர்களிடையே உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, நமது விமானப்படை பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களைத் துல்லியமாகத் தாக்கியுள்ளது என்றும் பாக். இதயத்தை நாம் எப்போது துளைத்துத் தாக்கினோம் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், விமானப்படை மற்றும் ராணுவப்படைக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மிகச் சிறப்பாக இருந்தது என்ற அவர், நமது அதிநவீன தொழில்நுட்பத்தோடு பாகிஸ்தானால் போட்டிப்போட முடியாது என்றும் நம்மிடம் உலகின் தலைசிறந்த தொழில்நுட்பம் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
இதன் காரணமாகவே நமது விமானப்படைத் தளத்தைத் தாக்கும் அவர்களின் எண்ணம் பலிக்கவில்லை என்ற அவர் எல்லையைப் பாதுகாக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன் எனத் தெரிவித்தார். மேலும், எஸ் 400 பாதுகாப்பு அமைப்பு நமக்கு வலிமையான பாதுகாப்பை அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பாகிஸ்தான் இனியும் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாடு எடுத்தால் பதிலடி கடுமையாக இருக்கும் என்ற அவர், பாகிஸ்தான் தீவிரவாத முகாம், விமானத் தளங்கள் மட்டுமின்றி, அவர்களின் தீய நோக்கத்தையும் தகர்த்தீர்கள் என்றும் தெரிவித்தார். நமது லட்சுமண ரேகை என்பது பயங்கரவாதிகளை அழிப்பது மட்டுமே என்று குறிப்பிட்ட அவர், இன்னொரு முறை பாகிஸ்தான் நம்மை உரசிப் பார்த்தால் தாக்கினால் சரியான பதிலடி தருவோம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications