ஹரியானா நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி.. மற்றவர்கள் நிலை என்ன?
சண்டீகர்: ஹரியானாவில் பிவானி மாவட்டத்தில் சனிக்கிழமை நடந்த நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலியாகிவிட்டனர். பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
ஹரியானா மாநிலம், பிவானி பகுதியில் உள்ள கல் குவாரியில் மிகப் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பிவானி மாவட்டத்தில் உள்ள தோஷம் பகுதியில் அமைந்துள்ளது டாடம் சுரங்கப் பகுதி.

இந்த பகுதியில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கினர். இதில் இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மற்ற தொழிலாளர்களின் நிலை என்னவென தெரியவில்லை.
நிறைய பேரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அறிந்த அந்த மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் கூறுகையில், பிவானி மாவட்டத்தில் தோஷம் பகுதியில் டாடம் சுரங்கத்தில் நடந்த நிலச்சரிவு எதிர்பாராதது.
மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. உள்ளூர் அதிகாரிகளுடன் நான் தொடர்பில் இருந்து மீட்பு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளேன். அது போல் காயமுடன் மீட்போருக்கு தேவையான மருத்துவ உதவி குறித்து அறிவுறுத்தியுள்ளேன் என்றார்.
நிலச்சரிவு நிகழ்ந்த போது அங்கிருந்த தொழிலாளர்கள் வாகனங்களில் மற்றொரு பணியிடத்திற்கு சென்று கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அவர்களின் வாகனத்துடன் அவர்கள் சிக்கிக் கொண்டனர். கானாக் பஹாரி மற்றும் டாடம் சுரங்கங்களில் சுரங்க பணிகள் அதிக அளவில் நடப்பதால் மாசு காரணமாக அங்கு அப்பணிகளை நடத்தக் கூடாது என பசுமை தீர்ப்பாயம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில் இந்த தடை வியாழக்கிழமை விலக்கிக் கொள்ளப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் பணிகள் தொடங்கின.
வடமாநிலங்களில் இது போன்ற சுரங்கங்களில் பலர் குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் இது போன்ற பேரிடர் காலங்களில் உயிரிழக்கும் சூழலும் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications