1.5 கி.மீ தூரம்.. உயிரை கையில் பிடித்து கதறிய இளைஞர்.. அசராத லாரி ஓட்டுநர்.. அதிர்ச்சி காரணம்!
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் லாரியிலிருந்து கோதுமை மூட்டைகளை திருடியதாக இளைஞர் ஒருவரை லாரிக்கு முன்பக்கமாக கட்டி 1.5 கி.மீ தூரம் லாரியை ஓட்டிச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் முக்த்சாருக்கு லாரி ஒன்று கோதுமை லோடை இறக்க வந்திருக்கிறது. அப்போது கடைகளில் இறக்கி வைக்கப்பட்ட கோதுமை மூட்டைகளில் இரண்டு மூட்டைகள் குறைந்திருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.
இது குறித்து லாரியின் அருகில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இளைஞரை பிடித்து ஓட்டுநர் விசாரித்துள்ளார். அந்த இளைஞர் இரண்டு கோதுமை மூட்டைகளை திருடி சென்றதை சிலர் பார்த்துள்ளதாக கூறியுள்ளனர்.

திருட்டு சம்பவம்
இதனையடுத்து ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநர் ஜெயல் சிங் அந்த இளைஞரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். அதுவும் போதாதென்று அருகில் உள்ள கடைகளில் பணிபுரிபவர்களை அழைத்து கும்பலாக தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால் அந்த இளைஞர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். லாரி ஓட்டுநர் இதனை காதில் வாங்காமல் கடுமையாக தாக்கி கைகால்களை கயிறு கொண்டு கட்டியுள்ளார். பின்னர் அதே லாரியின் முன்புறத்தில் அந்த இளைஞரை சேர்த்து கட்டியுள்ளார். அவரை நன்றாக பிடித்துக்கொள்ள லாரியின் ஓட்டுநரும் அவருக்கு அருகில் அமர்ந்திருக்கிறார். லாரியை வேறு ஒருவர் இயக்கியுள்ளார்.

வீடியோ
பின்னர் அங்கிருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ள முக்த்சார் காவல்நிலையத்திற்கு லாரி இயக்கப்பட்டிருக்கிறது. இந்த 1.5 கி.மீ தூரமும் அந்த இளைஞர் தனது உயிரை கையில் பிடித்தபடி வந்திருக்கிறார். அதேபோல அந்த இளைஞரை லாரியின் ஓனர் ஒரு கையில் பிடித்திருந்திருக்கிறார். இப்படியாக லாரி ஒரு வழியாக காவல் நிலையம் வந்து சேர்ந்துள்ளது. இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் மீது திருட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால் லாரியின் ஓட்டுநர் மீதோ அல்லது ஓனர் மீதோ எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

தர்ணா
இதனையடுத்து ஓட்டுநர் மீது காவல்துறையினர் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் கோதுமை மூட்டைகளை திருடியதற்கான வீடியோ ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் எனவே இதனை அடிப்படையாக வைத்துதான் அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்ததாகவும் கூறியுள்ளனர். எனவே லாரி உரிமையாளர் மீது எவ்வித வழக்கும் பதிவு செய்யக்கூடாது என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஒருவேளை மீறி அவ்வாறு செய்தால் தாங்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் கூறியுள்ளனர்.

விளக்கம்
சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "குற்றம்சாட்டப்பட்ட இளைஞரை லாரியின் முன்பக்கமாக கயிற்றில் கட்டி அவருடன் லாரி ஓட்டுநர் அமர்ந்து வந்துள்ளனர். இதில் சாதி பிரச்னை எதுவும் கிடையாது. லாரி ஓட்டுநரும் குற்றம்சாட்டப்பட்ட நபரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்தான். எனவே இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். மேலும் இந்த குற்றம் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கோதுமை மூட்டைகளை திருடியதாக கூறி இளைஞரை லாரியின் முன் பக்கமாக கட்டி 1.5 கி.மீ தூரம் இழுத்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications