ரூ.540 கோடி மோசடி.. போதைப்பொருள் தொடர்பான பணப்பரிமாற்ற வழக்கில் அகாலிதளம் தலைவர் அதிரடி கைது
சண்டிகர்: பஞ்சாப்பில் செயல்பட்டு வரும் சிரோமணி அகாலிதளம் கட்சியின் முக்கிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான பிக்ராம் மஜிதியாவை பஞ்சாப் லஞ்ச ஒழிப்பு படையின் சிறப்பு விசாரணை குழுவினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த ரூ.540 கோடியை பல்வேறு வகைகளில் பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப்பில் சிரோமணி அகாலி தளம் கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த கட்சியின் தலைவராக சுக்பீர் சிங் பாதல் உள்ளார். இவரது மருமகன் பெயர் பிக்ராம் மஜிதியா. இவர் பஞ்சாப்பின் முன்னாள் அமைச்சர் ஆவார். அதுமட்டுமின்றி சிரோமணி அகாலிதளம் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உள்ளார்.

இவர் மீது கடந்த 2021ம் ஆண்டில் போதைப்பொருள் தொடர்பான பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை பஞ்சாப்பின் லஞ்ச ஒழிப்புத்துறையின் சிறப்பு விசாரணை குழுவினர் விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக பிக்ராம் மஜிதியா மற்றும் அவர் தொடர்புடைய 25 இடங்களில் சிறப்பு விசாரணை குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். பஞ்சாப்பின் அமிர்தசரஸில் மட்டும் 9 இடங்களில் சோதனைகள் நடைபெற்றது. இந்த சோதனையை தொடர்ந்து பிக்ராம் மஜிதியா கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக பஞ்சாப் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார்பில், ‛‛முதற்கட்ட விசாரணையில் போதைப்பொருள் மூலம் ரூ.540 கோடிக்கு மேல் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. பிக்ராம் மஜிதியாவின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் வங்கி கணக்கில் ரூ.161 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் சந்தேகத்திற்குரிய வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் ரூ.141 கோடி பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. மேலும் ரூ.236 கோடிக்கும் அதிமாக சொத்துகள் வாங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. இப்படி பல வழிகளில் ரூ.540 கோடிக்கும் அதிகமான போதைப்பொருள் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தனர்.
பஞ்சாப்பில் தற்போது ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. பகவந்த் மான் முதல்வராக உள்ளார். இந்நிலையில் தான் சிரோமணி அகாலி தளம் கட்சியை குறிவைத்து பஞ்சாப் அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்த கட்சியின் தலைவர்கள் கருத்து தெரிவிக்கின்றன. அதேபோல் பிக்ராம் மஜிதியாவின் கைது நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் சிறப்பு விசாரணை குழுவினர் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்துள்ளதாக கைதான பிக்ராம் மஜிதியா மற்றும் அவரது மனைவி குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் அவர்கள் சிறப்பு விசாரணை குழுவினரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகி இணையதளங்களில் பரவி வருகிறது. இந்த விவகாரம் தற்போது பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications