குடிபோதையில் ஆம்ஆத்மி முதல்வர்? பஞ்சாப் சட்டசபையில் களேபரமாக்கிய எதிர்க்கட்சிகள்.. என்ன நடந்தது?
சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சட்டசபையில் குடிபோதையில் வந்ததாக கூறி எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். அதுமட்டுமின்றி பகவந்த் மான் மதுபானம் குடித்துள்ளாரா? என்பது தொடர்பாக பரிசோதனை நடத்த வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தி அமளியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக பகவந்த் மான் இருக்கிறார். மே 1 உழைப்பாளர் தினத்தையொட்டி பஞ்சாப்பில் சிறப்பு சட்டசபை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

பஞ்சாப்பில் உள்ள உழைக்கும் மக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த சிறப்பு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் முதல்வர் பகவந்த் மான், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைவரும் பங்கேற்றனர்.
இந்நிலையில் தான் சட்டசபை கூட்டத்தொடருக்கு முதல்வர் பகவந்த் மான் மதுபானம் குடித்து போதையில் வந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர். காங்கிரஸ் எம்எல்ஏ பிரதாப் சிங் பாஜ்வா, ''முதல்வர் பகவந்த் மானுக்கு மதுபானம் குடித்துள்ளாரா? என்பதை சோதனை செய்ய வேண்டும். அதேபோல் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் இந்த சோதனையை மேற்கொள்ள வேண்டும்'' என்று கூறினார்.
இருப்பினும் இந்த கோரிக்கையை சட்டசபை சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார். அதன்பிறகு பகவந்த் மான் பேசினார். அப்போது அவர், ''உழைப்பாளர் தினத்தையொட்டி தொழிலாளர்களை கவுரவிக்கும் வகையில் இந்த சட்டசபை கூட்டம் நடக்கிறது. இதனால் ஒவ்வொரு உறுப்பினர்களும் கண்ணியத்தை கடைப்பிடிக்க வேண்டும்'' என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். பகவந்த் மான் மதுபானம் குடித்துள்ளாரா? என்பது தொடர்பாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினர். ஆனால் அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பிறகு பாஜக மற்றும் அகாலி தளம் கட்சிகளின் எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
அதன்பிறகு சிரோமணி அகாலிதளம் கட்சியும் சட்டசபை நடவடிக்கைகள் தொடர்பான வீடியோவை வெளியிட்டு, ''பகவந்த் மான் மது அருந்திவிட்டு சபைக்கு வந்தது வெட்கக்கேடானது. உண்மையை கண்டுபிடிக்க போதைப்பொருள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்'' என்று கூறியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.













Click it and Unblock the Notifications