ஹரியானா உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் சோலியை முடிச்சுவிட்ட பாஜக- கோட்டைகளே தூள் தூள் தவிடுபொடி!
சண்டிகர்: ஹரியானா மாநில உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் பாஜக பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி இதுவரை கோட்டையாக காப்பாற்றி வந்த இடங்களைக் கூட பாஜக கைப்பற்றி அக்கட்சியினருக்கு அதிர்ச்சி தந்துள்ளது. ஹரியானாவின் 10 மாநகராட்சிகளில் பாஜக 9 இடங்களிலும் சுயேட்சை ஒரு இடத்திலும் வென்றுள்ளார்.
ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அந்த தேர்தலில் பாஜக அதிரடியாக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து ஹரியானா உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.

ஹரியானா மாநில உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி கை சின்னத்தில் போட்டியிட்டது. இந்த தேர்தலிலும் காங்கிரஸ் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவி இருக்கிறது.
ஹரியானாவின் 10 மாநகராட்சிகளில் 9-ஐ பாஜகவே வென்றுள்ளது; ஒரே ஒரு இடத்தில் சுயேட்சைதான் வென்றுள்ளார். காங்கிரஸ் கட்சியால் ஒரு இடத்தில் கூட மேயர் பதவியை கைப்பற்ற முட்யவில்லை.
பாஜகவுக்கு அதிர்ச்சி தரக் கூடிய முடிவாக இருந்தது மானேசர் மாநகராட்சித் தேர்தல்தான். இங்கு சுயேட்சையிடம் பாஜக வேட்பாளர் தோல்வியைத் தழுவினார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான பூபிந்தர் சிங் ஹூடாவின் சொந்த மாவட்டமான ரோஹ்டாக்கிலும் பாஜக வேட்பாளர் ராமவ்தார் பால்மீகி வென்றுள்ளார். இது காங்கிரஸ் கட்சியினருக்கு கடும் அதிர்ச்சியாகும். டெல்லி புறநகரான கூர்கானிலும் பாஜகவின் காவி கொடிதான் பறக்கிறது.
ஹரியானா உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தொடர்பாக முதல்வர் நயாப் சிங் சைனி கூறுகையில், ஹரியானாவில் இரட்டை என்ஜின் அரசாங்கம் செயல்பட்டு வந்தது; தற்போது உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மூலம் மூன்று என்ஜின் அரசாங்கம் செயல்படும். மக்கள் மேம்பாட்டுக்கான பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு தங்களது ஆதரவையும் நம்பிக்கையையும் மக்கள் வெளிப்படுத்தி இருக்கின்றனர் என்றார்.
ஹரியானா முன்னாள் முதல்வரான பூபிந்தர் ஹூடா கூறுகையில், காங்கிரஸுக்கு பெரிய இழப்பு எதுவும் இல்லை; சில இடங்களில் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications