கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட பாடகர் சித்து மூஸ் வாலா! பின்னணியில் கனடா கேங்! வெளியான பகீர் தகவல்
சண்டிகர்: பாடகர் சித்து மூஸ் வாலா கொடூரமாக சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், பஞ்சாப் போலீசார் இது குறித்து சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் 28 வயது பாடகர் சித்து மூஸ் வாலா. துப்பாக்கி கலாசாரம், கேங் கலாசாரம் உள்ளிட்டவற்றை புகழந்து பாடுவதாக இவர் ஏற்கனவே சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
கல்யாணம் ஆகி 4 மாசமாச்சு! அவரு ’சரியில்லை’..! காவல்நிலையத்தில் கதறிய இளம்பெண்! இந்த பிரச்சினை வேறயா?
சித்து மூஸ் வாலா பாடகர் மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபட்டு இருந்தார். காங்கிரஸ் கட்சியில் உள்ள அவர், கடந்த பஞ்சாப் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தார்.
துப்பாக்கிச் சூடு
இவர் நேற்று (மே 29) பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் உள்ள ஜவஹர்கே என்ற இடத்தில் தனது ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயம் அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை நோக்கி சரமாரியாகச் சுட்டுத் தள்ளி உள்ளனர். சுமார் 30க்கும் மேற்பட்ட ரவுண்டுகள் அவரது காரை நோக்கிச் சுடப்பட்டதில், சித்து மூஸ் வாலா மிக மோசமாகக் காயமடைந்தார்.
படுகொலை
அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன்னரே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் படுகாயம் அடைந்த மேலும் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சனிக்கிழமை தான் சித்து மூஸ் வாலாவுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டு இருந்தது. அவருடன் சேர்ந்த மாநிலத்தில் மொத்தம் 424 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பைப் பஞ்சாப் அரசு குறைத்து இருந்தது. பாதுகாப்பு குறைக்கப்பட்ட 24 மணி நேரத்தில் சித்து மூஸ் வாலா சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பதற்றம்
இது பஞ்சாப் மாநிலத்தில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. சித்து மூஸ் வாலாவின் ரசிகர்களும் காங்கிரஸ் தொண்டர்களும் பஞ்சாப் அரசின் மீது கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இந்தச் சூழலில் சித்து மூஸ் வாலா மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், அவரது ரசிகர்களை அமைதியாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், சித்து மூஸ் வாலா கொலை செய்யப்பட்டது குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளது.
என்ன காரணம்
சித்து மூஸ் வாலாவின் ஜீப் முழுக்க முழுக்க குண்டுகளால் துளைக்கப்பட்டு இருந்தது. சித்து மூஸ் வாலா தனது இருக்கையில் சரிந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டார். சித்து மூஸ் வாலாவின் ஜீப் அப்பகுதியில் செல்லும் சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதையெல்லாம் வைத்து போலீசார் தங்கள் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். கேங் வார் காரணமாக இந்த படுகொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கனடா கேங்
மேலும், கனடா நாட்டை சேர்ந்த கேங் ஒன்றுக்கும் இந்த படுகொலையில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இது குறித்த பஞ்சாப் டிஜிபி விகே பவ்ரா கூறுகையில், "லாரன்ஸ் பிஷ்னோய் கேங் இந்தக் கொலையில் ஈடுபட்டுள்ளது. அந்தக் கும்பலைச் சேர்ந்த லக்கி என்பவர் கனடாவில் இருந்து இந்த கொலைக்குப் பொறுப்பேற்றுள்ளார். கடந்த ஆண்டு லாரன்ஸ் பிஷ்னோய் கேங்கை சேர்ந்த விக்கி மிடுகேரா என்பவர் கொலை செய்யப்பட்டு இருந்தார்.
பழிக்குப் பழி
அவரது கொலையில் சித்து மூஸ் வாலாவின் மேலாளர் ஷகன்ப்ரீத்தின் பெயர் இடம் பெற்று இருந்தது. எனவே, விக்கி கொலையில் சித்து மூஸ் வாலாவுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதி பிஷ்னோய் கேங் இந்த கொலையை செய்திருக்கலாம். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகளைக் கைது செய்வோம்" என்று தெரிவித்தார்.
யார் இந்த சித்து மூஸ் வாலா
பிரபல பஞ்சாபி பாடகரான சித்து மூஸ் வாலா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அவர் ஆம் ஆத்மி வேட்பாளர் விஜய் சிங்லாவிடம் 63,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இவரது மரணத்திற்குக் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.