பதைபதைக்குதே.. வெள்ளத்தில் வட இந்தியா! சண்டிகரில் ஒரே நாளில் 322 மிமீ மழை! வரலாற்றிலேயே முதல் முறை
சண்டிகர்: வரலாற்றிலேயே முதல்முறையாக சண்டிகரில் ஒரே நாளில் 300 மில்லி மீட்டருக்கும் அதிகமான அளவில் மழை பதிவாகி இருப்பதால் பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.
வட மாநிலங்களில் நேற்று முழுவதும் பெரு மழை கொட்டித் தீர்த்து இருக்கிறது. தலைநகர் டெல்லி, சண்டிகர் , இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில் நேற்று அம்மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கியது.

தலைநகர் டெல்லியில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான அளவில் மழை கொட்டித் தீர்த்ததால் முக்கிய சாலைகள், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. அதேபோல் இமாச்சல பிரதேசம் மற்றும் சண்டிகரில் டெல்லியை மிஞ்சும் அளவுக்கு பெரு மழை கொட்டித் தீர்த்து இருக்கிறது.
இமாச்சல பிரதேசத்தின் மனாலி, லேஹ் உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் காட்டாறுபோல் கரைபுரண்டு ஓடுகிறது. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு இருக்கின்றன. முக்கிய பாலங்கள் நீரில் மூழ்கி உள்ளன. வெள்ளத்தில், மலைச் சரிவுகளிலும் வாகனம் சிக்கும் வீடியோக்கள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி உள்ளன.

அதேபோல் பஞ்சாப் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களின் தலைநகராகவும், யூனியன் பிரதேசமாகவும் உள்ள சண்டிகரும் பெரு மழையின் காரணமாக வெள்ளத்தில் முழ்கி இருக்கிறது. நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் சண்டிகரில் 322 மிமீ மழை பதிவாகி இருக்கிறது.
சண்டிகர் வரலாற்றிலேயே ஒரே நாளில் இந்த அளவுக்கு மழை பதிவானதில்லை. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சண்டிகரில் இதுவரை ஒரே நாளில் 300 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பொழிந்ததே கிடையாது என்கிறார்கள். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் சண்டிகரில் ஒரே நாளில் 122.7 மில்லி மீட்டர் மழை பெய்தது.

அதுவே சண்டிகரில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழை அளவாக இருக்கிறது. இந்த பெரு மழை காரணமாக சண்டிரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வீடுகள், கட்டிடங்களுக்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்றும் சண்டிகரில் பெரும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறி ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஹரியானா ஆகிய 3 மாநிலங்களின் சந்திப்பாகவும், நுழைவு வாயிலாகவும் இருக்கும் சண்டிகர் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதால் பொது போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. சில முக்கிய ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.











Click it and Unblock the Notifications