சுய லாபத்திற்காக.. ராணுவ வீரர்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ்.. ஹரியானாவில் மோடி சரமாரி அட்டாக்
சண்டிகர்: நமது ராணுவத்தையும், ராணுவ வீரர்களையும் காட்டிக் கொடுத்த வரலாறு காங்கிரஸுக்கு உண்டு என்றும், நாட்டின் முதல் ஊழலை காங்கிரஸ் கட்சி ராணுவத்தில்தான் செய்தது என்றும் ஹரியானாவில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி கூறினார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. 4 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளது. 5-வது கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறுகிறது. இன்னும் 3 கட்ட தேர்தல்கள் நடைபெற வேண்டியிருப்பதால் அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகளும், தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் வீயூகம் வகுத்து வருகின்றன. பிரதமர் மோடி சமீப நாட்களாக தனது தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.
அந்த வகையில், ஹரியனாவில் இன்றும்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். மோடி கூறுகையில், "தேசபக்தி மாநிலமாக ஹரியானா உள்ளது. தேச விரோத சக்திகளை ஹரியாணா நன்கு அறிந்து வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு உரிய பாடங்களை ஹரியானா கற்பித்திருக்கிறது.
காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 எனும் சுவரை மோடி அரசு இடித்தது. இதனால் ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. நமது ராணுவத்தையும், ராணுவ வீரர்களையும் காட்டிக் கொடுத்த வரலாறு காங்கிரஸுக்கு உண்டு. நாட்டின் முதல் ஊழலை காங்கிரஸ் கட்சி ராணுவத்தில்தான் செய்தது. ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, ராணுவத்தில் ஊழல் செய்யும் 'சாதனையை' காங்கிரஸ் கட்சி தொடர்ந்து செய்தது.
போபர்ஸ் ஊழல் முதல் ஹெலிகாப்டர் ஊழல் வரை காங்கிரஸ் கட்சி ராணுவத்தில் பல ஊழல்கள் செய்துள்ளது. வெளிநாட்டில் இருந்து ஆயுத இறக்குமதி என்ற பெயரில் பெரும் பணத்தை சம்பாதித்து, இந்திய ராணுவத்தை காங்கிரஸ் பலவீனமாக வைத்திருந்தது. நமது வீர்களுக்கு தரமான உபகரணங்கள் கிடைக்கவில்லை. ராணுவ வீரர்களிடம் நல்ல துப்பாக்கிகள் கூட இல்லை.
ஆனால் இன்று இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை நமது ராணுவம் பெறுகிறது. ஒரு காலத்தில் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்து வந்த இந்தியா, தற்போது மற்ற நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் அளவுக்கு வளர்ச்சியை பெற்றுள்ளது. வளர்ந்த இந்தியாவை உருவாக்க உறுதியுடன் பாஜக அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications