ஹரியானாவில் இன்று விவசாயிகள் போராட்டம்- பெரும் எண்ணிக்கையில் போலீஸ் குவிப்பால் பதற்றம்
சண்டிகர்: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது ஹரியானாவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக ஹரியானாவில் இன்று விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளதால் பெரும் எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அண்மையில் ஹிசார் பகுதியில் கொரோனா சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து அங்கு போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இதனால் விவசாயிகள் மீது கொலை, கலவரம் ஏற்படுத்துதல், சட்டவிரோதமாக கூடுதல் என பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யபட்டன.
மொத்தம் 350 விவசாயிகள் மீது இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹரியானா போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளனர். இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காக 3,000க்கும் மேற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்தும் அதிரடிப்படை போலீசார் ஹரியானாவின் ஹிசாரில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.
இதனிடையே வரும் 26-ந் தேதி டெல்லி எல்லைகளில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு நாடு தழுவிய போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications