ஹரியானாவில் பாஜக vs காங்.! நூலிழையில் முந்துவது யார்? ஆம் ஆத்மி ஆட்டத்திலேயே இல்லையாம்! பரபர சர்வே
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையே அங்கு நடத்தப்பட்ட மிக முக்கிய சர்வே முடிவு ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. அங்குப் போட்டி எந்தக் கட்சிகளுக்கு இடையே இருக்கிறது என்பதை இது காட்டுவதாக உள்ளது.
ஹரியானா மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

சர்வே: இதற்கிடையே ஹரியானா தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட சர்வேயில் அங்கு முதல்வராக யார் வர விரும்புகிறீர்கள் என்று கேள்விக்கு மக்கள் விடையளித்துள்ளனர். டைம்ஸ் நவ் நவ்பாரத் மற்றும் மேட்ரிஸ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் முதல்வராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு மக்கள் பதிலளித்துள்ளனர்.
இதில் முதல்வராக இருக்கும் பாஜகவின் நயாப் சிங் சைனிக்கும் காங்கிஸின் பூபிந்தர் சிங் ஹூடாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருப்பினும், நூலிழையில் நயாப் சிங் முன்னிலையில் இருக்கிறது.
சைனிக்கு ஆதரவு: இந்த சர்வேயில் தற்போது முதல்வராக இருக்கும் பாஜகவின் நயாப் சிங் சைனி முதல்வராகத் தொடர வேண்டும் என சுமார் 31 சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேநேரம் காங்கிரஸின் பூபிந்தர் சிங் ஹூடாவுக்கும் அங்குச் செல்வாக்கு அதிகமாகவே இருக்கிறது. பூபிந்தர் சிங் ஹூடா முதல்வராக வேண்டும் என சுமார் 29% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இருவருக்கும் இடையே தான் அங்குக் கடுமையான போட்டி நிலவி வருகிறது. அங்கு ஆம் ஆத்மிக்கு பெரியளவில் ஆதரவு இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இது தவிர ஹரியானா முன்னாள் முதல்வரும் ஜனநாயக்க ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான துஷ்யந்த் சௌதாலாவுக்கு ஆதரவாக 8% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்ற தலைவர்கள் முதல்வராக வேண்டும் என்று 32% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கடும் போட்டி: ஹரியானா முதல்வர் பதவிக்கு நயாப் சிங் சைனி மற்றும் பூபிந்தர் சிங் ஹூடா இருவருக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவியது. ஹரியானாவில் கர்ஹி- சம்ப்லா-கிலோய் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வான பூபிந்தர் சிங் ஹூடா கடந்த 2005 முதல் 2014 வரை தொடர்ந்து இரண்டு முறை ஹரியானா முதல்வராக இருந்துள்ளார். இப்போது அவர் ஹரியானா சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார்.
மறுபுறம் 2024 தேர்தலில் ஹரியானாவின் லட்வா தொகுதியில் வென்ற நயாப் சிங் சைனி இப்போது அங்கே முதல்வராக இருக்கிறார். கடந்த 2019இல் நடந்த ஹரியானா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக-ஜேஜேபி கூட்டணி ஆட்சியை அமைத்தது. அப்போது மனோகர் லால் கட்டார் முதல்வரானார். இருப்பினும், 2024இல் கூட்டணி உடைந்த நிலையில், மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போது தான் சைனி முதல்வராக அறிவிக்கப்பட்டார். அவர் முதல்வர் பதவிக்கு வந்து சுமார் 160 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2019 தேர்தல்: ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 90 இடங்கள் உள்ளன. அங்குக் கடந்த 2019இல் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜகவால் 40 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இது முந்தைய தேர்தலை விட 7 இடங்கள் குறைவாகும். மறுபுறம் காங்கிரஸ் கட்சி 31 இடங்களில் வென்றது. அதாவது முந்தைய தேர்தலை விட 16 இடங்கள் கூடுதலாக வென்றிருந்தது.
ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் வென்ற நிலையில், இந்திய தேசிய லோக் தளம் மற்றும் ஹரியானா லோகித் கட்சி தலா ஒரு இடத்தில் வென்றன. சுயேச்சைகள் 7 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications