ஹரியானாவில் பயங்கரம்.. பசுவுக்காக இஸ்லாமிய இளைஞர் கும்பல் படுகொலையா? பதைபதைக்க வைக்கும் ஷாக் வீடியோ
பசுவை கடத்திச் சென்றதாக 22 வயது இஸ்லாமிய இளைஞர் கும்பலாக சேர்ந்து அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சண்டிகர்: அரியானா மாநிலத்தில் பசுவை கடத்திச் சென்றதாக 21 வயது இஸ்லாமிய இளைஞர் கும்பலாக சேர்ந்து அடித்து படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொல்லப்படுவதற்கு முன் இளைஞரையும் அவருடன் சென்ற மேலும் இருவரையும் பிடித்து தாக்கும் வீடியோவும் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியானா மாநிலம் நுஹ் அருகே தவ்ரு பகுதியில் டெம்போ ஒன்று சென்றுகொண்டு இருந்தது. இந்த நிலையில் அந்த டெம்போவுக்கு பின்னால் வேகமாக சென்ற கார் ஒன்று அதன் மீது மோதி விபத்துக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
இதில் காரில் சென்ற வாரிஸ் என்ற 21 வயது இளைஞர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், காயங்கள் அதிகமாக இருந்த நிலையில் அவர் மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

பசுவுக்காக படுகொலையா?
இந்த சூழலில் தன்னுடைய மகன் விபத்தில் உயிரிழக்கவில்லை என வாரிசின் பெற்றோர் குற்றம்சாட்டி இருக்கிறார்கள். பசுக்களை கடத்திச் சென்ற காரணத்தால் பசு பாதுகாவலர்கள் அவரை விரட்டிச் சென்று கும்பலாக தாக்குதல் நடத்தியதாகவும், அதனால் ஏற்பட்ட காயங்களின் காரணமாகவே வாரிஸ் உயிரிழந்தார் என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

போலீசார் விளக்கம்
இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், "ஹுசைன்பூர் கிராமத்தை சேர்ந்த வாரிஸ், நஃபீஸ் மற்றும் சவுகீன் ஆகிய இருவருடன் சாண்டிரோ காரில் சென்று கொண்டு இருந்தார். அதிகாலை 5 மணியளவில் அந்த கார் காய்கறிகளை ஏற்றிச் சென்ற டெம்போவின் மீது மோதியது. அந்த டெம்போவில் 2 பேர் சென்று கொண்டிருந்தனர்." என்று தெரிவித்து இருக்கிறார்.

முதல் தகவல் அறிக்கை
டெம்போவை ஓட்டிச் சென்ற அப்துல் கரீம், "நானும் எனது மகனும் டெம்போவில் சென்று கொண்டு இருந்தபோது எதிரே வந்த சாண்ட்ரோ கார் எங்கள் மீது மோதியது. நான் காயங்கள் ஏதும் இன்றி தப்பிவிட்டேன். ஆனால், என்னுடைய மகனுக்கு காயங்கள் ஏற்பட்டன. காரில் வந்த 3 பேருக்கும் காயங்கள் ஏற்பட்டன. இதனை தொடர்ந்து நான் காவல்துறைக்கு தொடர்புகொண்டு தெரிவித்தேன்.

பசு பாதுகாவலர்களுடன் வந்த போலீஸ்
அதன் பின்னர் தவ்ருவில் இருந்து போலீசார் மற்றும் பசு பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர்கள் அப்பகுதிக்கு வந்தனர். அந்த காரின் பின்புறம் ஒரு பசு இருந்தது. அதற்கும் காலில் காயங்கள் ஏற்பட்டன. அதனை பசு பாதுகாப்பு அமைப்பான கவ் ரக்ஷா தளம் அமைப்பினர் மீட்டனர்." என்று தெரிவித்ததாக முதல் தகவல் அறிக்கையில் போலீசார் குறிப்பிட்டு உள்ளார்கள்.

காயமடைந்தவர்கள் மீது வழக்கு
படுகாயமடைந்த வாரிஸ் மற்றும் நபீல் ஆகியோர் நல்ஹார் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக போலீசார் கூறி இருக்கிறார்கள். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி இருப்பதாகவும், டெம்போ ஓட்டுநரின் புகாரை தொடர்ந்து காரில் பயணித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் கூறி இருக்கிறார்கள்.

பெற்றோர் மறுப்பு
ஆனால், இறந்த வாரிசின் பெற்றோர் போலீசாரின் தகவலை ஏற்கவில்லை. பசு பாதுகாவலர்கள் வாரிஸ் சென்ற காரில் மோதி விபத்து ஏற்படுத்தி அவர்களை தாக்கி கொன்றதாக குற்றம்சாட்டி இருக்கின்றன. நேற்று வாரிசின் பிரேத பரிசோதனை நடைபெற்ற நிலையில் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. அதே நேரம் இதன் பின்னணியில் பஜ்ரங்தள் அமைப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
|
லீக்கான அதிர்ச்சி வீடியோ
விபத்தில் இறந்ததாக கூறப்படும் வாரிஸ் மற்றும் அவருடன் சென்ற மேலும் 2 பேரையும் ஒரு கும்பல் காரில் அமர வைத்து தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவர்களின் பெயர்களை கேட்டபோது வாரிஸ், சவுகீன், நபீஸ் என்று கூறுவதும், மூவரின் முகத்திலும் காயங்கள் இருந்ததும் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளது.
|
விரட்டிச் செல்லும் வீடியோ
இந்த வீடியோவை பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கும் மோனு மானேசர் என்ற பசு பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர், டெம்போவை காரில் ஒரு கும்பல் ஆயுதங்களோடு விரட்டிச் செல்லும் வீடியோவையும் பகிர்ந்து இருக்கிறார். ஏபிவிபி தொடர்பாக பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கும் அவர் தாக்குதலுக்கு முன் இந்த வீடியோ பதிவு செய்து இருக்கலாம் என்றும், அவரை விசாரிக்க வேண்டும் என்று வாரிசின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர். -












Click it and Unblock the Notifications