கழுத்தை நெரிப்பதற்கு முன்னர்.. பிரபல பாடகி சங்கீதாவுக்கு 10 தூக்க மாத்திரைகள்.. நடந்தது என்ன?
சண்டீகர்: 12 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட பாடகி சங்கீதா கழுத்து நெரித்து கொல்லப்பட்டதாகவும் அவர் கொல்லப்படுவதற்கு முன்னர் அவருக்கு 10 தூக்க மாத்திரைகள் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் வசித்து வந்தவர் பாடகி சங்கீதா எனும் திவ்யா. ஹரியானாவை சேர்ந்தவர். இவர் ஹரியான்வி மொழி பாடகியாக இருந்தார்.
கடந்த மே 11 ஆம் தேதி சங்கீதாவை காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல் துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து கடந்த 12 நாட்களாக போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.

ஹரியானா
இந்த நிலையில் ஹரியானா மாநிலம் பைனி பைரன் கிராமத்தில் எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்றுப் பார்த்த போலீஸார் அது சங்கீதா என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து கொலை மற்றும் ஆள் கடத்தல் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

ரவி- அனில்
இதையடுத்து ஹரியானாவை சேர்ந்த ரவி மற்றும் அனில் என்ற இருவரை கைது செய்தனர். மியூசிக் வீடியோ எடுப்பதாகக் கூறி சங்கீதாவை வரவழைத்து அவரை திட்டமிட்டு கொலை செய்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர். சங்கீதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

சங்கீதா கழுத்து நெரித்து கொலை
இந்த நிலையில் சங்கீதாவின் கழுத்தை நெரித்து கொன்றது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அது மட்டுமல்லாமல் அனிலுடன் சங்கீதா உணவு அருந்திய ஹோட்டல் சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் இந்த கொலைக்கு மூளையாக இருந்தவர் ரவி என சொல்லப்படுகிறது.

சங்கீதாவுடன் காரில் சென்ற கொலையாளி?
அவரது அறிவுறுத்தலின்பேரில்தான் அனில் என்பவர் டெல்லி வந்ததாகவும் சங்கீதாவை காரில் அழைத்து சென்றதாகவும் தெரிகிறது. இருவரும் ஹரியானாவில் காலாநவுரில் உணவு சாப்பிட்டுள்ளனர். மேஹம் பகுதிக்கு இருவரும் வந்தவுடன் ஒரு கடையில் கரும்பு ஜூஸை வாங்கியுள்ளார் அனில்.

10 தூக்க மாத்திரை
அந்த ஜூஸில் 10 தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்ததாக தெரிகிறது. இதை குடித்த சங்கீதா சுயநினைவில்லாமல் கார் இருக்கையில் சரிந்தார். அப்போது ரவியை அனில் கார் இருக்கும் இடத்திற்கு வரழைத்தார். அங்கு இருவரும் கழுத்தை நெரித்து சங்கீதாவை கொன்றுள்ளனர்.

சங்கீதா இறந்துவிட்டாரா
பின்னர் சங்கீதா இறந்துவிட்டாரா என்பதை சோதனை செய்த ரவி, அவரது உடலை மேஹம் பகுதியில் வைத்து எரித்துள்ளார். கொலையாளிகளுடன் சங்கீதாவுக்கு நெருக்கமான உறவு இருந்ததாகவும் போலீஸார் தெரிவிக்கிறார்கள். எதற்காக இந்த கொலை நடந்தது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications