"இந்தி ஹார்ட்லேண்டில் எப்போதும் கிங்.." அசைக்க முடியாத வெற்றியை பதிவு செய்த பாஜக! ஏன் முக்கியம்
சண்டிகர்: ஹரியானாவில் இப்போது பாஜகவே முன்னிலையில் இருக்கிறது.. அங்கு எக்ஸிட் போல் முடிவுகளுக்கு நேர் மாறாக பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தி ஹார்ட்லேண்டில் முக்கியம் மாநிலமான ஹரியானாவில் பாஜக வெற்றி என்பது பாஜகவுக்கு முக்கியமானதாக இருந்தது. பல தடைகளைத் தாண்டி ஹரியானாவை பாஜக தக்கவைத்துள்ளது.
ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக தான் ஆட்சியில் இருக்கிறது. அங்கு முதலில் மனோகர் லால் கட்டார் முதல்வராக இருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் நயாப் சிங் சைனி முதல்வராக இருக்கிறார்.

இந்தி ஹார்லேண்ட் எனச் சொல்லப்படும் இந்தி பேசும் மாநிலங்களில் முக்கிய மாநிலமாக ஹரியானா இருப்பதால், இது பாஜகவுக்கு மிக முக்கியமான மாநிலங்களில் ஒன்றாகும். இந்த முறை ஹரியானாவை பாஜக தக்கவைப்பது கஷ்டம் என்று சொல்லப்பட்ட நிலையில், அதை பாஜக செய்து காட்டியுள்ளது.
ஹரியானா தேர்தல்: ஹரியானாவில் கடந்த 2014ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அங்கு மொத்தம் 90 சீட்கள் உள்ள நிலையில், பாஜக 47 சீட்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. அதேநேரம் 2019ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலிலேயே கூட பாஜகவால் அங்குத் தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. 40 சீட்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இதையடுத்து ஜேஜேபி உடன் கூட்டணி அமைத்தே பாஜக ஆட்சியைப் பிடித்தது.
இந்த முறை கள சூழலை வைத்துப் பார்க்கும் போது காங்கிரஸ் கட்சியே ஆட்சியை அமைக்கும் எனச் சொல்லப்பட்டது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கூட ஹரியானாவில் பாஜகவுக்கு இணையாகக் காங்கிரஸ் கட்சியும் 5 சீட்களில் வென்று இருந்தது. இதனால் பாஜகவின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்த ஹரியானா காங்கிரஸ் பக்கம் செல்லலாம் எனக் கூறப்பட்டது.
என்ன காரணங்கள்: இதற்கு சில முக்கிய காரணங்களையும் பட்டியலிட்டனர். அதாவது ஜாட் மக்களின் வாக்குகள் கடந்த இரு தேர்தல்களாகக் காங்கிரஸில் இருந்து பிராந்திய கட்சிகளுக்குப் பிரிந்த நிலையில், அது மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வரும் என்றும் இது காங்கிரஸ் வெற்றிக்கு உதவும் எனச் சொல்லப்பட்டது. ஜாட் மக்களின் வாக்குகள் காங்கிரஸுக்கு வந்தது என்னவோ உண்மை தான். ஆனால், திட்டமிட்டு காய்களை நகர்த்திய பாஜக மற்ற அனைத்து ஓபிசி பிரிவினரையும் தங்கள் பக்கம் கொண்டு வந்துவிட்டது.
மேலும், குமாரி செல்ஜாவின் ஆதரவாளர்களுக்கு 9 சீட் மட்டுமே தரப்பட்டது. இதனால் தலித் மக்கள் வாக்குகளும் எதிர்பார்த்த அளவுக்குக் காங்கிரஸ் கட்சிக்குச் செல்லவில்லை. இவை எல்லாம் சேர்ந்து தான் பாஜகவைக் கரை சேர்த்துள்ளது.
இந்தி ஹார்ட்லேண்ட்: இதன் காரணமாகவே பல பிரச்சினைகள் இருந்தாலும் அதையும் தாண்டி இந்தி ஹார்ட்லேண்டில் முக்கிய மாநிலமாக இருக்கும் ஹரியானாவில் பாஜக 3வது முறையாக வென்றுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் இந்தி ஹார்ட்லேண்டில் கணிசமான இடங்களை பாஜக இழந்து இருந்தது. மத்தியில் பாஜகவால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கு இதுவே காரணமாக இருந்தது.
ஏன் முக்கியம்: வட இந்தியாவில் இந்த டிரெண்ட் தொடங்கிவிட்டதாகவும் இதனால் இந்தி ஹார்ட்லேண்ட் பகுதியில் பாஜக பலவீனமடைவதாகவும் கூறப்பட்டது. ஆனால், அதை எல்லாம் பொய்யாக்கும் வகையில் இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்துவிட்டது. அடுத்த சில வாரங்களிலே மற்ற இந்தி மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களிலும் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இது பாஜகவுக்கு நிச்சயம் நல்ல செய்தியாக இருக்கும்












Click it and Unblock the Notifications