நீதிபதிக்கே இந்த நிலையா! சுற்றி வளைத்து தாக்குதல்! 3 வயது மகளுடன் ஒர்க்ஷாப்பில் ஒளிந்த ஹரியானா ஜட்ஜ்
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் மிக மோசமான வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில், நுஹ் நீதிபதி மற்றும் அவரது மகள் சென்ற கார் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே மோசமான வன்முறை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள நூஹ் மாவட்டத்தில் ஜ்ரங் தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகள் இணைந்து போராட்டம் நடத்தினர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அங்கு திடீரென வன்முறை ஏற்பட்டது.
இந்த வன்முறை காரணமாக இதுவரை 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், சிலர் காயமடைந்துள்ளனர். இதனால் அங்கே குர்கான், பல்வால், ரேவாரி மற்றும் ஃபரிதாபாத் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி: இதற்கிடையே நுஹ் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் அம்மாவட்ட தலைமை நீதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் சென்ற கார் வன்முறையில் சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு மத ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்ட நிலையில், நீதிபதி மற்றும் அவரது 3 வயது மகள் சென்ற கார் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் இருந்து அவர்கள் நூலிழையில் தப்பியுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கள்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்போது நீதிபதி அஞ்சலி ஜெயின் மற்றும் அவரது மகள் சென்ற காரை வன்முறையாளர்கள் சுற்றி வளைத்துத் தாக்கியுள்ளனர். இதனால் அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளக் காரை விட்டு இறங்கிப் பாதுகாப்பான இடத்திற்குத் தஞ்சம் புகுந்துள்ளனர்.
பரபரப்பு: அவர்கள் மீது கல் வீசி சம்பவமும் துப்பாக்கிச் சூடு சம்பவமும் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து நீதிபதியும் அவரது மகளும் நூஹில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் தஞ்சமடைந்தனர். வன்முறை குறைந்த பிறகே அவர்களை சில வழக்கறிஞர்கள் நேரில் சென்று மீட்டுள்ளனர். இது குறித்து நீதிமன்ற ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
என்ன நடந்தது: கடந்த திங்கள்கிழமை மதியம் 1 மணியளவில் நீதிபதி, அவரது மூன்று வயது மகள் மற்றும் அவரது காவலர் சியாராம் ஆகியோர் நல்ஹரில் உள்ள மருத்துவக் கல்லூரிக்குச் சென்றுள்ளனர். அங்கே மருந்துகளை வாங்கிக் கொண்டு மதியம் 2 மணியளவில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் கார் டெல்லி-ஆல்வார் சாலையில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது சுமார் 100-150 பேர் அவர்களைச் சுற்றி வளைத்துள்ளனர்.
இது குறித்து புகார் அளித்த நபர் கூறுகையில், "வன்முறையாளர்கள் நாங்கள் சென்ற கார் நோக்கி கற்களை வீசினர். சில கற்கள் காரின் பின் கண்ணாடியைத் தாக்கின. இதையடுத்து நாங்கள் நான்கு பேரும் காரில் இருந்து இறங்கி எங்கள் உயிரைக் காப்பாற்ற ஓடினோம். நாங்கள் அங்குப் பழைய பேருந்து நிலையத்தில் இருந்த ஓர்க்ஷாப்பில் ஒளிந்து கொண்டோம். சிறிது நேரம் கழித்து சில வழக்கறிஞர்கள் வந்து எங்களைக் காப்பாற்றினர். மறுநாள், காரை எடுக்கச் சென்ற போது கார் முற்றிலுமாக எரிந்த நிலையில் இருந்தது" என்று அவர் தெரிவித்தார்.
இது குறித்து இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 148 (கலவரங்கள்), 149 (சட்டவிரோதமாக ஒன்று கூடுவது) என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது..












Click it and Unblock the Notifications