காதலனை பார்க்க கனடாவில் இருந்து வந்த பெண்.. நெற்றிப் பொட்டில் இரு தோட்டாக்கள்.. கொடூரம்! என்னாச்சு
சண்டிகர்: கனடா நாட்டில் வசித்து வந்த பெண் ஒருவர் தனது காதலனைத் தேடி ஹரியானா மாநிலத்திற்கு வந்துள்ளார். ஆனால், அதுவே அவரை மிகப் பெரிய ஆபத்தில் கொண்டு போய் தள்ளியுள்ளது.
காதலால் ஒருவர் என்னவெல்லாம் செய்வார்கள் என்று சொல்ல முடியாது. பல படங்களில் காதலியைத் தேடி ஊர் ஊராக.. அவ்வளவு ஏன் நாடு நாடாகத் தேடிச் செல்லும் காட்சிகள் எல்லாம் இருக்கும்.
ஆனால், இதையெல்லாம் வெறும் திரைப்பட காட்சிகள் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. நம்மை சுற்றிலும் இருக்கும் பலரும் காதலுக்காக இப்படி ஏதேதோ செய்வதைப் பார்த்திருக்கலாம். இருப்பினும், திரைப்படங்களில் வருவது போல அதெல்லாம் 100% நல்லதாகவே இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. அதுபோல ஒரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

கனடா பெண்
கனடாவில் வசித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது காதலனைப் பார்க்க ஹரியானா வந்துள்ளார். இருப்பினும், இங்கே வந்து சில நாட்களில் அவர் திடீரென மாயமாகியுள்ளது. இந்தச் சூழலில், அவர் இப்போது ஹரியானாவில் வயல்வெளி ஒன்றில் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூன் மாதமே நீலம் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. பின்னர் அவரது காதலன் சுனில் நீலத்தை தனது வயலில் புதைத்ததாகக் கூறப்படுகிறது. இப்போது பிவானியில் அவரது எலும்புக்கூட்டை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
23 வயதான நீலம் கனடாவில் வசித்து வந்தார். அவர் தனது காதலன் சுனிலை பார்க்கக் கடந்தாண்டு இந்தியா வந்துள்ளார். அப்போது தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் நீலத்தை கடத்தி கொலை செய்ததை சுனில் ஒப்புக்கொண்டார். ஏதோ வாக்குவாதத்தின் போது, நீலத்தை நெற்றிலேயே இரண்டு முறை சுனில் சுட்டுள்ளார். பின்னர் அவரது உடலைத் தனது வயலில் புதைத்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். நீலம் மாயமானது குறித்து அவரது சகோதரி ரோஷ்னி கடந்த ஜூன் மாதம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து அந்த பெண் கூறுகையில், "எனது சகோதரி IELTS தேர்வில் தேர்ச்சி பெற்று வேலைக்காகக் கனடாவுக்குச் சென்றிருந்தார். அங்கே அவளுக்கு வாழ்க்கை சிறப்பாகவே இருந்தது. ஆனால், சுனில் தான் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து என் சகோதரியை இந்தியாவுக்கு வரவழைத்தார்" என்றார். கனடாவில் இருந்து நீலம் வந்த பிறகு, அவரது குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ளவில்லை. மேலும், சுனிலையும் காணவில்லை என்றும் நீலத்தின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனால் சந்தேகமடைந்த அவர்கள் போலீசாரிடம் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சடலமாக மீட்பு
போலீசார் கடத்தல் வழக்குப் பதிவு செய்த போதிலும், அதன் பிறகு எந்தவொரு நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. பொறுத்துப் பொறுத்து பார்த்த நீலத்தின் குடும்பத்தினர் ஒரு கட்டத்தில் ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜை நேரில் சந்தித்துச் சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதையடுத்து இந்த வழக்கு குற்றப் புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு குறித்து விசாரிக்கத் தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், அவர்கள் சுனிலை கைது செய்தனர்.
போலீசார் சுனிலை பிடித்து விசாரித்துள்ளனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது வயலில் 10 அடி ஆழத்தில் இருந்து எலும்புக் கூட்டை தோண்டி எடுத்தனர். இதையடுத்து சடலம் சோனிபட் சிவில் மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்போது கைது செய்யப்பட்ட சுனில் மீது ஏற்கனவே பல கொலை மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் குறித்துப் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் எதற்காக இப்படி காதலியையே சுட்டுக் கொன்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications