"அணுகுண்டு பியூசை பிடுங்கியதும் நமது பலம் எதிரிக்கு புரிந்துவிட்டது!" தெளிவாக பிரதமர் சொன்ன பாயிண்ட்
சண்டிகர்: ஆபரேஷன் சிந்தூரில் மிக முக்கிய பங்கு வகித்த பஞ்சாப்பின் ஆதம்பூர் விமானப்படைத் தளத்திற்குப் பிரதமர் மோடி இன்று நேரில் சென்றார். அங்குப் பாதுகாப்புப் படை வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, அணு குண்டு குறித்து பொய்களைப் பரப்பிய எதிரிகளுக்கு நாம் அடிக்க தொடங்கியதும் நமது பலம் புரிந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
பஞ்சாப்பில் உள்ள ஆதம்பூர் விமானப்படைத் தளத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி இன்று பாதுகாப்புப் படை வீரர்களைச் சந்தித்தார். இந்தியா பாகிஸ்தான் மோதலில் இந்த ஆதம்பூர் விமானப் படைத் தளம் மிக முக்கிய பங்காற்றியது. இதன் காரணமாகவே அங்கு நேரில் சென்ற பிரதமர் மோடி, விமானப்படை வீரர்களை நேரில் சந்தித்தார். அவர்களைப் பாராட்டவும் செய்தார்.

பலம் புரிந்துவிட்டது
அணு குண்டை வைத்து மிரட்டல் உட்பட எந்தவொரு விவகாரத்திலும் எதிரிகளுக்கு இந்தியப் படைகள் தகுந்த பதிலடி கொடுக்கும்போது 'பாரத் மாதா கி ஜெய்' கோஷம் எதிரொலிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "நமது படைகள் அணு குண்டு பிளாக் மெயில் மிரட்டலை முறியடிக்கும்போது நமது எதிரிகள் 'பாரத் மாதா கி ஜெய்' முழக்கத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வார்கள். அணு குண்டு குறித்து பொய்களைப் பரப்பிய எதிரிகளுக்கு நாம் அடிக்க தொடங்கியதும் நமது பலம் புரிந்துவிட்டது.
"பாரத் மாதா கீ ஜெய்" முழக்கம் நாட்டிற்காக ஏதாவது செய்ய விரும்பும் ஒவ்வொரு இந்தியரின் குரலாகும். இது நாடு முழுவதும் எதிரொலிக்கிறது.. அதே போல் போரின் போதும் வலிமையாக இந்த முழக்கம் இன்னும் வலிமையாக ஒலிக்கும்" என்றார்.
ஆபரேஷன் சிந்தூர்
காஷ்மீரில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் பற்றிப் பேசிய பிரதமர் மோடி, "ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை என்பது வழக்கமான ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல. இந்தியா மீது கை வைத்தால் அதன் விளைவு அழிவு மட்டுமே என்பதைப் பயங்கரவாதிகள் இப்போது உணர்ந்துள்ளனர். அப்பாவி மக்களை ரத்தம் சிந்த வைத்தால் அழிவைத் தருவோம். தனக்குள் தீவிரவாதிகளை வைத்திருக்கும் பாகிஸ்தான் ராணுவத்தைப் பணிந்து போக வைத்துள்ளோம்.
பாகிஸ்தானுக்கு முழுத் தோல்வி
இன்று, விமானப்படை, கடற்படை மற்றும் ராணுவத்தின் துணிச்சலான வீரர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். உங்கள் வீரத்தால், இன்று ஒவ்வொரு மூலையிலும் ஆபரேஷன் சிந்தூரின் எதிரொலியைக் கேட்க முடிகிறது.. இந்த முழு நடவடிக்கையிலும், ஒவ்வொரு இந்தியரும் உங்களுடன் நின்றனர். ஒவ்வொரு இந்தியரின் பிரார்த்தனைகளும் உங்களுடன் இருந்தன. நாட்டின் அனைத்து மக்களும் இன்று நமது வீரர்களுக்கு நன்றி சொல்கிறார்கள்.
பாகிஸ்தானின் ட்ரோன், விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் என அனைத்தும் நமது திறமையான வான் பாதுகாப்பு அமைப்பின் முன்பு தோல்வியடைந்தன. இந்திய விமான படையின் வீரர்களாகிய நீங்கள் நாட்டை பாதுகாத்து இருக்கிறீர்கள். அற்புதமான வேலையைச் செய்த உங்களுக்கு வாழ்த்துகள்.
ஆபரேஷன் சிந்தூர்
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியிருந்தது. இதில் நாம் பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களில் உள்ள தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து அழித்தோம். இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவத்தின் இந்த வெற்றியைப் பொறுக்காமல் பாகிஸ்தான் அப்பாவி மக்களைக் குறிவைத்துத் தாக்குதலை ஆரம்பித்தது. அதற்கு இந்தியா தக்கப் பதிலடி கொடுக்க தொடங்கியதால் பயந்து போன பாகிஸ்தான் மோதலை நிறுத்த கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications