கர்நாடக அரசை கலைக்க முயன்ற பாஜகவிற்கு ஷாக்.. தன் கட்சி எம்எல்ஏக்களை ஹரியானாவில் பதுக்கியது
Recommended Video

சண்டீகர்: கர்நாடக அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக இரு சுயேச்சை எம்எல்ஏக்கள் வெளியிட்ட அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும், ஹரியானா மாநிலத்திலுள்ள, குருக்ராம் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், பாஜக 104 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபையில், ஆட்சியமைக்க 113 எம்எல்ஏக்கள் தேவைப்பட்டது.
எடியூரப்பா தலைமையில் பாஜக எவ்வளவோ குட்டி கரணம் அடித்து பார்த்தும், எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை வளைக்க பார்த்தும், எதுவும் நடக்கவில்லை. இதனால், முதல்வராக பொறுப்பேற்றும், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பதவி விலகினார் எடியூரப்பா.

காங்கிரஸ் கூட்டணி
இதையடுத்து 80 தொகுதிகளை வென்ற காங்கிரஸ், 37 தொகுதிகளில் வென்ற மஜத ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன. மஜதவை சேர்ந்த குமாரசாமி முதல்வராக பதவிவகிக்கிறார். ஏற்கனவே மஜத கூட்டணியில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் 1 எம்எல்ஏ, சுயேச்சைகள் இருவரின் ஆதரவும் இந்த ஆட்சிக்கு இருந்ததது.

சுயேச்சைகள் முடிவு
ஆனால், திடீரென சுயேச்சைகள் இருவரும், ஆட்சிக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். இதன் பின்னணியில் பாஜக உள்ளதாக காங்கிரஸ், மஜத தலைவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். சங்கர் மற்றும் நாகேஷ் ஆகிய சுயேச்சைகள் இருவரும் இன்று ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து, கர்நாடக அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறும் கடிதம் அளிக்க உள்ளனர்.

பதிலடி
இந்த சுயேச்சைகளையும், காங்கிரஸ், மஜத கட்சிகளில் இருந்து சில எம்எல்ஏக்களையும் இழுத்து ஆட்சியமைக்க பாஜக திட்டமிடுவதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக, காங்கிரஸ், மஜத தலைவர்கள், பாஜகவிலிருந்து எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க குதிரை பேரம் ஆரம்பித்து ஷாக் கொடுத்துள்ளனர். இதையடுத்து குர்காமில் 104 பாஜக எம்எல்ஏக்களும் நேற்று முதல் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
|
ஹரியானா
இந்த நிலையில்தான், ஹரியானா காங்கிரஸ் நிர்வாகிகள், பாஜக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விடுதியை முற்றுகையிட்டு தர்ணா நடத்தி வருகிறார்கள். மக்கள் பிரச்சினையை தீர்க்காமல், இங்கே வந்து தங்கியிருப்பதா என அவர்கள் கோஷமிடுகிறார்கள். இதன் மூலம், பாஜக எம்எல்ஏக்களை கர்நாடகாவிற்கே அனுப்பி வைக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது. கர்நாடகாவிற்கு பாஜக எம்எல்ஏக்கள் வந்தால், அவர்களை இழுத்து வந்து ஆட்சியை பலப்படுத்த காங்கிரஸும், மஜதவும் திட்டம் வைத்துள்ளதால், ஆப்பை தேடி வைத்துக்கொண்ட அவஸ்தையில் தவிக்கிறது பாஜக.

ஆபத்து இல்லை
2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றாலும் கர்நாடக அரசுக்கு ஆபத்து இல்லை. ஏனெனில், பெரும்பான்மையை நிரூபிக்க 113 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், இப்போது அரசுக்கு 117 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. அதேநேரம், காங்கிரஸ், மஜதவில் அமைச்சர் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ளவர்கள் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தால்தான் சிக்கல் எழ வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications