பஞ்சாப்பில் மது குடித்தவர்கள் மர்ம மரணம்.. 3 நாளில் 85 பலி.. கைதான மாஸ்டர் மைண்ட்.. பகீர் பின்னணி!
சண்டிகர்: பஞ்சாப்பில் மது குடித்தவர்கள் 85 பேர் அடுத்தடுத்து பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாஸ்டர் மைண்ட் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுக்க கள்ள சாராயம் காரணமாக, ஆங்காங்கே மக்கள் பலியாவதும் தொடர் கதையாகி உள்ளது. கொரோனா லாக்டவுன் காரணமாக தற்போது கள்ளச்சாராய உற்பத்தி அதிகமாகி உள்ளது.
இந்த நிலையில் பஞ்சாப்பில் அடுத்தடுத்து மது குடித்த 85 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இவர்கள் எல்லோரும் கள்ள சாராயம் குடித்து பலியாகி உள்ளனர்.
வேகம்
நேற்று மாலை வரை இந்த கள்ள சாராயம் காரணம் 38 பேர் பலியாகி இருந்தனர். தற்போது பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்து உள்ளது. தற்போது பஞ்சாப்பில் மொத்தம் இதனால 85 பேர் பலியாகி உள்ளனர். மூன்று மாவட்டங்களில் இருக்கும் மக்கள் இப்படி பலியாகி உள்ளனர்.பஞ்சாப்பில் இருக்கும் அமிர்தசரஸ், பட்டாலா, டார்ன் டாரன் ஆகிய மாவட்டங்களில் மரணங்கள் நிகழ்ந்து உள்ளது.
மிக மோசம்
இதில் இன்னும் பலரின் உடல்நிலை மோசமாக உள்ளது. இதனால் அங்கு ஏற்பட்டு இருக்கும் மரணங்கள் உயர வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். பலி எண்ணிக்கை 100ஐ தாண்ட வாய்ப்புள்ளது என்றுகூறுகிறார்கள் . ஒரு விதமான கள்ள சாராயத்தை இவர்கள் எல்லோரும் குடித்த காரணத்தால் இப்படி பலியாகி உள்ளனர். இந்த கள்ள சாராயம் விற்ற கும்பல் தற்போது கைது செய்யப்பட்டுள்ளது.
எங்கு
அதன்படி பஞ்சாப்பில் டார்ன் தரன் பகுதியில் 65 பேர் பலியாகி உள்ளனர். அமிர்தசரஸ் பகுதியில் 12 பேர் பலியாகி உள்ளனர். 8 பேர் குர்தாஸ்பூர் பகுதியில் பலியாகி உள்ளனர். இந்த கள்ள சாராயம் காரணமாக பலியான எல்லோரின் வீட்டிற்கும் 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கள்ள சாராய கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, இரண்டு நாட்களில் 100 இடங்களில் சோதனை செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்டார்
அடுத்தடுத்து செய்யப்பட்ட சோதனையில் 25 பேர் கைது செய்யப்பட்டனர். கோபிந்தா எனப்படும் கோபிந்தர் சிங்தான் இந்த கள்ள சாராய கும்பலுக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். இவரை இன்று போலீசார் கைது செய்தனர் . மக்களிடம் சாராயம் சப்ளை செய்த டீலர் தரசன் ராணியும் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப்பில் இருக்கும் தாபாக்கள் மூலம் இவர்கள் கள்ள சாராயம் விற்று உள்ளனர்.
தாபா சாராயம்
அங்கு இருக்கும் தாபாக்களுக்கு இவர்கள் லாரியில் தண்ணீர் கொடுப்பது போல வந்து, சாராயம் சப்ளை செய்து, அதை மக்களுக்கு விற்று உள்ளனர். ஒரு மாதமாக இந்த சம்பவம் நடந்து வந்துள்ளது. போலீசார் சோதனையில் மொத்தம் 750 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சாராயம் மட்டுமின்றி விதவிதமான போதை வஸ்துக்கள், போதை உண்டாக்கும் நீர் போன்ற வஸ்துக்கள் போலீஸ் சோதனையில் கிடைத்துள்ளது.