"முடியாது.." ஆளுநர் மாளிகையில் மத நிகழ்ச்சி! பில்லுக்கு பணம் தர மறுத்த பஞ்சாப் அரசு! நடந்தது என்ன
சண்டிகர்: ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் உச்சத்தைத் தொட்டு உள்ளது.
இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் பல்வேறு மாநிலங்களிலும் ஆளுநர்களுக்கும் ஆளும் அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.
சட்டசபையில் நிறைவேற்றப்படும் பல முக்கிய சட்டங்களுக்கு ஆளுநர் அனுமதி அளிப்பதில்லை என்று ஆளும் தரப்பினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

மோதல்
தமிழ்நாடு, மேற்கு வங்கம், டெல்லி என எதிர்க்கட்சிகள் ஆளும் பல்வேறு மாநிலங்களிலும் இதே நிலை தான். ஸ்டாலின், மம்தா தொடங்கிப் பல முதல்வர்களும் மாநில ஆளுநர்களைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதே நிலைத்தான் இப்போது ஆம் ஆத்மி ஆளும் மற்றொரு மாநிலமான பஞ்சாபிலும் ஏற்பட்டு உள்ளது. பஞ்சாப்பில் இப்போது பன்வாரிலால் புரோகித் ஆளுநராக உள்ளார். அங்கு இருக்கும் பகவந்த் மான் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர்ச்சியாக மோதல் போக்கு நிலவி வருகிறது.

உச்சம்
இந்த மோதல் போக்கு இப்போது உச்சத்தை எட்டியுள்ளது. ராஜ்பவனில் ஒரு வாரமாக நடந்த நிகழ்ச்சிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து ரூ.8 லட்சம் பில் பில் தொகை கோரப்பட்டு அரசுக்குக் கடிதம் எழுதப்பட்டு இருந்தது. இருப்பினும், இதைத் தர மறுத்த அரசு, ஆட்சேபனை தெரிவித்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்கே அதைத் திருப்பி அனுப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடிதம்
பஞ்சாபில் உள்ள ராஜ்பவனில் கடந்த ஏப்ரல் 23 முதல் 29ஆம் தேதி வரை மத ரீதியான நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. இதற்குத் தேவையான பொருட்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு உள்ளன. இதற்காக மொத்தம் 8.31 லட்ச ரூபாய் செலவானதாகத் தெரிகிறது. இந்த பில்லுக்கான தொகையைக் கேட்டு ஆளுநர் மாளிகையில் இருந்து கடந்த ஜூன் 16ஆம் தேதி மாநில அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.

குழப்பம்
அதில் மே 11ஆம் தேதி போடப்பட்டு இருந்த பில் இணைக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு பில் தொகையைச் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது. இந்த செலவுகளை எந்தத் துறையின் செலவாகக் கணக்குக் காட்ட வேண்டும் என மாநில உயர் அதிகாரிகள் ஆலோசித்ததாகத் தெரிகிறது. தீவிர ஆலோசனைக்குப் பின்னரும் கூட நிதித் துறை அதிகாரிகளால் இதில் ஒருமித்த முடிவை எடுக்க முடியவில்லை.

திருப்பி அனுப்பிய மாநில அரசு
இதையடுத்து அந்த கடிதத்தை மீண்டும் அவர்கள் பஞ்சாப் ராஜ் பவனுக்கே திருப்பி அனுப்பினர். ஆளுநர் மாளிகையில் இருந்து பெறப்பட்ட பில்லை மாநில அரசு மீண்டும் ராஜ்பவனிற்கே திரும்பி அனுப்புவது இதுவே முதல்முறையாகும். டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசு, லெப்டினன்ட் ஆளுநருடன் தொடர்ந்து மோதல் போக்கு நிலவும் நிலையில், ஆம் ஆத்மி ஆளும் மற்றொரு மாநிலமான பஞ்சாபிலும் இப்போது அதே நிலைமை ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications