பாக். எல்லைக்கு வெடிகுண்டை எடுக்க வந்த தீவிரவாதி! திடீரென குண்டு வெடித்ததால் உயிரிழப்பு! என்ன நடந்தது
சண்டிகர்: எல்லையோர மாநிலமான பஞ்சாபில் அமிர்தசரஸ் பகுதியில் திடீரென இன்று குண்டுவெடிப்பு ஏற்பட்டது. பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை எடுக்கச் சென்ற தீவிரவாதி அதைத் தவறாகக் கையாண்டதால் அது வெடித்துச் சிதறியுள்ளது. இதில் அந்த தீவிரவாதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து எல்லையோர மாநிலங்கள் ஹை அலர்ட் மோடில் இருக்கிறது. அங்கு எல்லா நடவடிக்கைகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே எல்லை மாநிலங்களில் ஒன்றான பஞ்சாபில் குண்டுவெடிப்பு அரங்கேறியுள்ளது.

குண்டுவெடிப்பு
பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் பைபாஸ் சாலை அருகே இன்று திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் ஒருவர் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும், அங்கு அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளன.
அதாவது உயிரிழந்த நபர் பப்பர் கல்சா என்ற காலிஸ்தான் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அமிர்தசரஸ் பைபாஸ் சாலை அருகே வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறது. அதை எடுக்கவே பப்பர் கல்சா தீவிரவாதி அங்குச் சென்றிருக்கிறார். வெடிகுண்டை எடுக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அது அவரது கையிலேயே வெடித்துச் சிதறியிருக்கிறது. இதையடுத்து சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அங்குச் சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார்.
என்ன நடந்தது!
பஞ்சாபில் அமிர்தசரஸ் ரூரல் மாவட்டத்தில் உள்ள காம்போ அடுத்துள்ள நௌஷேரா கிராமத்திற்கு அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது.. வெடிகுண்டை எடுக்கும்போது அவரது கையிலேயே குண்டு வெடித்ததால் அவரது கைகள் துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். இது தொடர்பாகத் தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அந்த பகுதியில் வேறு யாரும் வராதபடி தடுப்புகளை அமைத்தனர்.
அங்கு வேறு எதாவது வெடிகுண்டுகள் இருக்கிறதா என்ற சோதனையிலும் இறங்கியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பால் அங்குப் புகை மூட்டம் காணப்படுகிறது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.

பஞ்சாப் போலீசார்
இந்தச் சம்பவம் நடந்தபோது இதில் தீவிரவாதிகளுக்குத் தொடர்பு இல்லை என்றே போலீசார் கூறினர். அந்த நபர் குப்பையைச் சேகரிக்கும் வியாபாரி என்றும் பழைய உலோக குப்பையை எடுக்க வந்த போது பழைய குண்டு வெடித்திருக்கலாம் என்றே முதலில் கூறினர். ஆனால், தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையிலேயே உயிரிழந்தவர் தீவிரவாதி என்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக அமிர்தசரஸ் ரூரல் மூத்த காவல்துறை அதிகாரி மணிந்தர் சிங் கூறுகையில், "அந்த தீவிரவாதி வெடிகுண்டை எடுக்க வந்தபோது அது எதிர்பாராத வகையில் வெடித்துச் சிதறி இருக்கிறது. அந்த நபருக்குப் பயங்கரவாதக் குழுவுடன் தொடர்பு இருக்கிறது. அந்த தீவிரவாதி பப்பர் கல்சா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்றே நினைக்கிறோம்..
தீவிர விசாரணை
பொதுவாக இதுபோல கைவிடப்பட்ட குப்பைகளைக் கொட்டும் பகுதிகளில் தீவிரவாதிகள் தங்கள் பொருட்களை மறைத்து வைப்பதும், அதை எடுக்க வருவதையும் கடந்த காலங்களில் நாம் பார்த்திருக்கிறோம். அதுபோன்ற சம்பவமே இப்போது நடந்துள்ளது. வெடிகுண்டை தவறாகக் கையாண்டதால் அது வெடித்துவிட்டதாகச் சந்தேகிக்கிறோம்" என்றார்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் பின்னணியில் வேறு சிலர் இருக்கிறார்களா.. இது பெரிய தீவிரவாத தாக்குதல் திட்டத்தின் ஒரு பகுதியா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். கடந்த மார்ச் மாதம் தான் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் பஞ்சாபில் தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பான பப்பர் கல்சாவுடன் தொடர்புடைய 15 இடங்களில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications