"தப்பு செய்துவிட்டோம்" கழுத்தில் பதாகை! கழிவறையை சுத்தம் செய்த பஞ்சாப் மாஜி துணை முதல்வர்! என்னாச்சு
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும் அகாலி தள கட்சியின் தலைவருமான சுக்பிர் சிங் பாதல் இன்று அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் நுழைவாயிலில் கழுத்தில் "தவறு செய்துவிட்டோம்.. மன்னித்துக் கொள்ளுங்கள்" என்ற பதாகையுடன் வீல்சேரில் அமர்ந்திருந்தார். மேலும், பொற்கோயிலில் பாத்திரங்களைக் கழுவி, கழிப்பறையைச் சுத்தம் செய்தார். மாஜி பஞ்சாப் துணை முதல்வர் இப்படிச் செய்ய என்ன காரணம்! அவர் செய்த தவறு என்ன என்பதை நாம் பார்க்கலாம்.
பஞ்சாப் மாநிலத்தில் ஒரு காலத்தில் மிகவும் வலிமையாக இருந்த கட்சி என்றால் ஷிரோமணி அகாலி தள். இவர்கள் பஞ்சாபில் பல முறை ஆட்சியில் இருந்துள்ளனர்.

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர்: கடைசியாக 2007ம் ஆண்டு முதல் 2017 வரை 10 ஆண்டுகள் பஞ்சாபில் சிரோமணி அகாலி தள் கட்சி தான் ஆட்சியில் இருந்தது. அந்த காலகட்டத்தில் மறைந்த பிரகாஷ் சிங் பாதல் முதல்வராகவும், அவரது மகன் சுக்பிர் சிங் பாதல் துணை முதல்வராகவும் இருந்தனர். அந்த காலகட்டத்தில் சீக்கிய மதத்திற்கு எதிராகச் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது..
குறிப்பாகக் கடந்த 2007ம் ஆண்டு சீக்கிய மதம் குறித்து அவதூறாகப் பேசிய தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது உள்ளிட்ட பல விஷயங்கள் அப்போது ஆட்சியில் இருந்தோருக்கு எதிராகச் சீக்கிய மதத்தின் உயர் அதிகார அமைப்பான அகால் தக்த்தில் முன்வைக்கப்பட்டது. பிரகாஷ் சிங் பாதல், சுக்பிர் சிங் பாதல், மாஜி அமைச்சர் பிக்ரம் சிங் மஜிதியா ஆகியோர் மீது விசாரணை நடந்தது. இதில் தங்கள் தவறை ஒப்புக் கொண்ட சுக்பிர் சிங் பாதல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.

விசாரணை: சீக்கிய மதத்தின் உயர் அதிகார அமைப்பான அகால் தக்த் விசாரணையின் முடிவில் பிரகாஷ் சிங் பாதல், சுக்பிர் சிங் பாதல் உள்ளிட்டோரைக் குற்றவாளிகளாக அறிவித்தது. மேலும், தண்டனையாக அவர்கள் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் பாத்திரங்களைக் கழுவி, கழிப்பறையைச் சுத்தம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. பிரகாஷ் சிங் பாதல் ஏற்கனவே உயிரிழந்துவிட்ட நிலையில், அவருக்கு முன்பு வழங்கப்பட்ட சீக்கிய சமுதாயத்தின் பெருமை என்ற பட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் தான் தண்டனையை நிறைவேற்ற சுக்பீர் சிங் பாதல் உள்ளிட்டோர் பொற்கோயிலுக்கு வந்தனர். சுக்பீர் சிங் பாதல் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள போதிலும் சுக்பீர் சிங் பாதல் வீல்சேரில் வந்தார். காலை சுமார் ஒரு மணி நேரம் அவர் நுழைவாயிலில் அமர்ந்திருந்தார். அவர் கழுத்தில் ஒரு பதாகையையும் போட்டிருந்தார். அதில் குற்றவாளிகளான எங்களை மன்னித்துவிடுங்கள் உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

கழிவறையைச் சுத்தம் செய்தார்: காலை சுமார் ஒரு மணி நேரம் இந்த பதாகையுடன் வாசலிலேயே அமர்ந்திருந்த சுக்பீர் சிங் பாதல் , அதன் பிறகு சுமார் ஒரு மணி நேரம் அவர் பொற்கோயிலின் கழிவறையைச் சுத்தம் செய்தார். அதைத் தொடர்ந்து அங்கு சமையலறையில் அவர் சுமார் ஒரு மணி நேரம் பாத்திரங்களைக் கழுவி சுத்தம் செய்தார். இது தொடர்பாகப் போட்டோ மற்றும் வீடியோ இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications