எங்க அண்ணன் மறைஞ்சிட்டாரே.. சரத் யாதவ் மறைவு.. கலங்கிய லாலு பிரசாத் யாதவ்.. ராகுல் இரங்கல்
சண்டிகர்: ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவ் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் உள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத், சரத் யாதவ் மறைவுக்கு வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
வடமாநிலத்தில் உத்தரப் பிரதேசமும் பீகாரும் பக்கத்து பக்கத்தில் இருந்தாலும் இரு மாநில அரசியலும் வெவ்வேறானது. உத்தரப் பிரதேசத்தில் இந்துத்துவா அரசியல் வேரூன்றி வளர்ந்தது என்றால் பீகாரில் அதற்கு எதிராக சோசலிச மற்றும் ஜனநாயக அரசியலின் பிடிப்பு பலமாக இருந்தது. அப்படியான அரசியலிலிருந்து வந்தவர்தான் சரத் யாதவ். சுதந்திரத்திற்கு பின்னரான இந்தியா குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை வலியுறுத்தி வந்த காலம் அது.
அந்த நாள் ஞாபகம் வந்ததே.. நண்பனே.. நண்பனே...டெல்லியில் சரத் யாதவை ஆரத் தழுவி அரவணைத்த நிதிஷ்குமார்
இது போன்று கருத்துக்களை முன்வைப்பதன் மூலம் தங்களது அரசியல் கட்சியையும் தங்களுக்கான தனிப்பட்ட ஆதாயத்தையும் தேடிக்கொண்டிருந்த அரசியல் தலைவர்களுக்கிடையே முற்றிலும் மாற்று சிந்தனையாளராக உதித்தவர்தான் 'ராம் மனோகர் லோகியா'. இந்தியாவில் உள்ள கம்யூனிச கட்சிகளின் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான இவரின் பேச்சு மற்றும் சிந்தனையாளர் ஈர்க்கப்பட்டு அரசியலில் நுழைந்தவர்தான் 'சரத் யாதவ்'.
மிசா கைது
இந்தியாவுக்கு என தனித்தன்மை வாய்ந்த இடதுசாரி சார்புடைய கொள்கைகளை உருவாக்கி அதனை அமல்படுத்துவதன் மூலம் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லாம் என்கிற கனவு ராம் மனோகர் லோகியா மூலமாக சரத் யாதவ் கற்றுக்கொண்டார். தன்னுடைய கல்லூரி வாழ்க்கையிலேயே இதற்கான விதையை விதைத்து மாணவர் தலைவராக செயல்பட்டார். தன்னுடைய 22வது வயதில் அதாவது 1969ம் ஆண்டு மிசாவில் கைது செய்யப்பட்டார். பின்னர் விடுதலை ஆனதும் மீண்டும் மீண்டும் 1972, 1975 என மூன்று முறை மிசாவில் கைதாகினார். இது அவரது அரசியல் பயணத்திற்கான பெரும் உத்தவேகத்தை கொடுத்தது.
முக்கிய தலைவர்
பின்னர் பீகாரின் முக்கிய தலைவர்களான நிதிஷ் குமார் மற்றும் லாலு பிராத்துக்கு அடுத்த தலைவராக சரத் யாதவ் அறியப்பட்டார். 1997ம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளம் கட்சியை உருவாக்கிய இவர் 1999-2004ம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசுடன் இணைந்து பயணித்தார். இக்காலத்தில் பல்வேறு துறைகளில் இவர் அமைச்சர் பொறுப்பையும் வகித்தார். தற்போது வரை மக்களவைக்கு 7 முறையும், மாநிலங்களவைக்கு மூன்று முறையும் தேர்வாகியுள்ளார். இவர் அமைச்சராக இருந்த காலத்தில் பாஜகவின் செயல்பாடுகளில் அதிக அளவு முரண்பாடுகளை எதிர்கொண்டதாக சொல்லப்படுகிறது.
பாஜக எதிர்ப்பு
எனவே மீண்டும் பாஜக கூட்டணியை அவர் விரும்பவில்லை. ஆனால் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் 2017ம் ஆண்டு தேர்தலில் பாஜகவுடன் கைக்கோர்க்க திட்டமிட்டதால் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து மோதல் வெடித்தது. இதன் விளைவாக 2018ம் ஆண்டு 'லோக் தந்த்ரிக் ஜனதா தளம்' எனும் கட்சியை தொடங்கினார். இக்கட்சி எதிர் பார்த்த அளவுக்கு கைக்கொடுக்கவில்லை எனவே பாஜகவை ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்று தனது கட்சியை லாலு பிரசாத்தின் 'ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன்' 2022ம் ஆண்டு இணைத்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டிருந்த சரத் யாதவ் ஓரிரு நாட்களுக்கு முன்னர் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மறைவு
இதனையடுத்து சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் இயற்கை எய்தினார். இவருடைய மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் உள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத், சரத் யாதவ் மறைவுக்கு வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில், "அண்ணன் சரத் யாதவ் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். முலாயம் சிங் யாதவ், நிதிஷ் குமார் மற்றும் நானும் ராம் மனோகர் லோஹியா மற்றும் கர்பூரி தாக்கூரிடம் இருந்து சோசலிச அரசியலைக் கற்றுக்கொண்டோம்.
லாலு பிரசாத்
பல தருணங்களில் நானும் சரத் யாதவும் ஒருவருக்கொருவர் கடுமையாக சண்டையிட்டுக்கொண்டோம். ஆனால் இது கருத்து மோதல் சண்டையாகதான் இருந்தது. எனவே இந்த சண்டைகள் எங்களிடையே எந்த பிளவையும் ஏற்படுத்தவில்லை" என்று கூறியுள்ளார். அதுபோல பிரதமர் மோடி, "சரத் யாதவ் மறைவு வேதனையளிக்கிறது. நீண்ட காலமாக எம்பியாகவும், அமைச்சராகவும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டவர். டாக்டர் லோஹியாவின் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். நான் எப்போதும் இவரை போற்றுவேன். சரத் யாதவ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்" என்று கூறியுள்ளார்.
ராகுல்காந்தி
அதேபோல ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "சரத் யாதவ் சோலிச தலைவராக இருந்தார். அதேபோல மிகவும் அடக்கமானவராவார். அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். இவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும்" என்று கூறியுள்ளார்