கூட்டணியிலும் இருப்பார்களாம்... பாஜகவையும் எதிர்ப்பார்களாம்... விசித்திர அரசியல்
சண்டிகர்: ஹரியானாவில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்றும், எதிர்க்கட்சியாக தான் ஆகமுடியும் எனவும் சிரோமணி அகாலிதளம் கட்சித் தலைவர் சுக்பிர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறது சிரோமணி அகாலி தளம் கட்சி . அதன் தலைவர் சுக்பீர் சிங் பாதலின் மனைவி ஹர்சிம்ரத் கவுர் மத்திய அமைச்சராக உள்ளார். இந்நிலையில் ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு எதிராக முறுக்கிக்கொண்டு நிற்கிறது சிரோமணி அகாலி தளம்.

பஞ்சாபில் பாஜக கூட்டணியில் உள்ள சிரோமணி அகாலி தளம், ஹரியானாவில் இந்திய தேசிய லோக்தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. சிரோமணி அகாலிதளம் கட்சியின் இந்த விசித்திர கூட்டணி தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில் ஹரியானாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சுக்பிர் சிங் பாதல், பாஜகவுக்கு ஆதரவாக எந்த அலையும் வீசவில்லை என்றும், மீண்டும் பாஜக ஆட்சியை பிடிப்பது கடினம் எனவும் தெரிவித்தார். மேலும், சிர்சா மாவட்டத்தில் பாஜகவால் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது என சவால் விடுத்தார். அடுத்தும் நம்மை தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என பாஜகவினர் தப்புக்கணக்கு போடுகின்றனர், அது நடக்காத காரியம் எனக் கூறினார்.
பஞ்சாப், ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு தலைநகர் சண்டிகர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பாஜக அரசில் அங்கம் வகித்துக்கொண்டே அந்தக் கட்சியை பற்றி விமர்சனம் செய்வது இதுவரை எந்த அரசியல் கட்சி தலைவரும் செய்யாத ஒன்று. பாஜக தலைவர்கள் கோபத்திற்கு ஆளாகக்கூடும் எனத் தெரிந்தே தனது மனதில் பட்டதை பேசியுள்ளார் சுக்பிர் சிங் பாதல்.












Click it and Unblock the Notifications