ஹரியானாவில் மீண்டும் பாஜக! நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தார் நயாப் சிங் சைனி
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் பாஜக முதல்வர் மனோகர் லால் கட்டார், அனைத்து அமைச்சர்களுடன் கூண்டோடு ராஜினாமா செய்திருந்தது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், பாஜக தலைவர் நயாப் சிங் சைனி தலைமையிலான புதிய அரசு, இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறது.
ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கின்றன. இதில் மெஜாரிட்டி பெற 46 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும், ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களிலும், இந்திய தேசிய லோக் தள் மற்றும் ஹரியானா லோக்கித் கட்சி தலா ஒரு இடங்களில் வென்றிருந்தது. அதேபோல, சுயேட்சை வேட்பாளர்கள் 7 தொகுதிகளில் வென்றிருக்கின்றனர்.

பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஜனநாயக ஜனதா கட்சியுடன் (ஜேஜேபி) கூட்டணி வைத்து பாஜக ஆட்சியை பிடித்தது. இதற்காக கூட்டணி கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலாவுக்கு துணை முதலமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், ஜேஜேபி தனது ஆதரவை விலக்கிக்கொண்டது. எனவே நேற்று முதலமைச்சர் கட்டார் உட்பட அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
ஆனால், நேற்று மாலையே சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இந்த முறை முதல்வர் பொறுப்பு கட்டாரிடமிருந்து நயாப் சிங் சைனியின் கைக்கு மாறியுள்ளது.
நயாப் சிங் ஓபிசி சமூகத்தை சேர்ந்தவராவார். குருக்ஷேத்ரா எம்பியாக இருக்கும் இவரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹரியானாவின் பாஜக மாநில தலைவராக கட்சி நியமித்திருந்தது. கடந்த 1996ம் ஆண்டிலிருந்து சைனி பாஜகவில் பணியாற்றி வருகிறார். கடந்த 2002ல் அம்பாலாவின் பாஜக இளைஞர் பிரிவின் மாவட்ட பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்திருக்கிறார். அதன் பின்னர் 2005ம் ஆண்டு அம்பாலா மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இப்படியாக கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து தற்போது மாநிலத்தின் முதலமைச்சர் பதவிக்கு வந்திருக்கிறார். இந்நிலையில், நயாப் சிங் தலைமையிலான அரசாங்கம் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டது. ஹரியானா சட்டப்பேரவையில் காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கெடுப்பில் பாஜக தனது பெரும்பான்மையை நிரூபித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications