ஏக்கருக்கு 10 ஆயிரம்..! மாநாட்டுக்கு இடம் தந்தவருக்கு பசுவும் கன்றும் பரிசு! விஜய் வைப்
விக்கிரவாண்டி: தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் மாநாட்டிற்கும் நிலம் அளித்துள்ள விசாலை கிராம மக்களுக்கு ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் விஜய் தரப்பிலிருந்து அளிக்கப்பட்டது என்பது என்ற தகவலுடன் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்த விவசாயிக்குப் பசுவும் கன்று ஒன்றை விஜய் பரிசளித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு இன்னும் 1 நாட்கள்தான் இடைவெளி இருக்கின்றது. இரவு பகல் பாராமல் அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டு மைதானத்தில் ஏறக்குறைய 1000 ராட்சத மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை இரவை பகலாக்க மாற்றக்கூடிய அளவுக்கு திறன் படைத்தவை. மேலும் அதற்கு தகுந்த சக்தி கொண்ட ஜெனரேட்டர் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.

முகப்பு வாயிலில் மட்டும் 2ஆயிரம் வாழை மரங்கள் நடப்பட உள்ளன. கூடவே தென்னை மரங்கள், இளநீர் தோரணங்கள் எனப் பல பளபளக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மாநாடு நடைபெறும் 80 ஏக்கர் மைதானத்தைச் சுற்றிலும் 20 உயரத்தில் கொடிகள் வரிசையாகப் பறக்கின்றன.
எப்படியும் 5 லட்சம் பேர் கூடுவார்கள் என்றும் அதை மீறி கூட்டம் வந்துவிடக் கூடாது என்பதற்கான கட்டுப்பாடுகளை விதித்துவருவதாகவும் தவெக செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் இனி வருங்காலங்களில் வேறு எந்த அரசியல் கட்சிகளும் பின்பற்றக் கூடிய அளவுக்குப் பலவேறு வசதிகளைச் செய்துள்ளதாகவும் இது ஒரு பெஞ்ச் மார்க் ஆக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டுக்காகத் திருச்சி, உளுந்தூர்பேட்டை எனப் பல இடங்களில் இடங்களைத் தேடி அலைந்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இறுதியில் இந்த இடத்தை விஜய் தேர்வு செய்ததாகத் தெரிவித்திருந்தார். கிட்டத்தட்ட 80 ஏக்கர் நிலம். இங்கே வாகனங்களை நிறுத்துவதற்காகத் தனியே 200 ஏக்கர் நிலமும் பெறப்பட்டுள்ளது.
இங்கே அமைந்துள்ள மாநாட்டுப் பந்தல் அருகே விஜய் ஒரு ராட்சத கொடிக் கம்பத்தை நிறுவி, அதை ஏற்ற இருக்கிறார். 27 ஆம் தே மாலை அந்தக் கொடி வானத்தில் சுதந்தரமாகப் பறக்க இருக்கிறது. இந்தக் கொடியை 5 ஆண்டுகளுக்கு அகற்றக் கூடாது என தவெக தரப்பு ஒப்பந்தம் போட்டுள்ளது என்றும் சொல்கிறார்கள். மாநாட்டுக்கு இடம் கொடுத்த விவசாயிகளிடம் ஏக்கருக்கு 10ஆயிரம் என வாடகைக்குப் பேசி இடத்தை பெற்றுள்ளனர். அதில் ராதாகிருஷ்ணன் என்ற ஏழை விவசாயியும் உள்ளார். அவருக்குச் சரியான வருமானம் இல்லை என்று தவெக நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

அது விஜய் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவருக்குப் பசுவும் கன்றும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. அதை வைத்து அவர் வாழ வழி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இவர் 2 ஏக்கர் நிலம் வாடகைக்கு அளித்துள்ளார். இவர் வீட்டுப் பக்கத்து வீட்டுக்காரர் 2 ஏக்கர் நிலம் கொடுத்துள்ளார். அவருக்கு இன்னும் பணம் கொடுக்கவில்லை என்று அவர் சொல்கிறார்.
இந்த 80 ஏக்கர் மாநாடு நடக்கும் இடத்தை தாண்டி பக்கத்தில் 35 ஏக்கர் பார்கிங் வசதிக்காக ஏற்பாடு செய்துள்ளனர். அதன் அருகில் 85 ஏக்கர். இந்த இரண்டும் போதாது என காவல்துறை சொன்னதால், 2 கிமீட்டர் தூரத்தில் 120 ஏக்கர் இடத்தை இப்போது பார்கிங் வசதிகளுக்காகத் தயார் செய்துள்ளனர்.
இந்த இடத்தில் முதலில் எடப்பாடிதான் மாநாடு போடுவதாக இருந்துள்ளது. அதற்காக இடத்தையும் சரி செய்துள்ளனர் அதற்குள் ஏதோ சிக்கல் என நிறுத்திவிட்டர். பிறகு ஸ்டாலின் இந்த மைதானத்தில் நடந்த கூட்டத்தில் இரண்டு எம்பி வேட்பாளர்களை அறிமுகம் செய்து கூட்டம் நடத்தி இருந்தார். மூன்றாவதாக விஜய் கைக்கு இந்த இடம் இப்போது சென்றுள்ளது. இதனால் வி சாலை விஜய் அரசியல் வாழ்க்கையில் ஒரு முக்கிய இடம் பிடித்துள்ளது.

இந்தப் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் ராஜாதேசிங்கு காலத்தில் துளசி ராஜா என்பவர் கட்டியது என்கிறார்கள். அவர்தான் இங்கே படை வீரர்கள் தங்க குளம் வெட்டியுள்ளார். அது இப்போது இங்கே உள்ளது. அதற்கு ஒரு கோபுரம் கட்டித் தரவேண்டி ஊர் மக்கள் விஜய்யை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளனர். இந்த மாநாட்டுக்கு நிலம் கொடுத்த அனைவருக்கும் பந்தக்கால் நடும் விழாவுக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்திருந்தார் புஸ்ஸி ஆனந்த். கட்டுக்கடங்காத கூட்டம் வந்ததால், அனைவரின் வீட்டுக்கும் சென்று முறையாக மரியாதை செய்துள்ளார் அவர். அதை ஊர்மக்கள் இப்போது நினைவுகூர்கின்றனர்.
இந்த ஊர் மக்கள் மாநாட்டை ஒட்டி நல்ல வியாபாரம் நடக்கும் என்று நம்புகிறார்கள். அதேபோல் விஜய் கட்சி தொடங்கியதை வரவேற்கிறார்கள். ஆட்சியைப் பிடிப்பது கடினம். ஆனால், 10 சீட்டு பிடிப்பார் என்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி மாற்றம் தேவை என்பது இந்த ஊர் மக்களின் கருத்து. ஒருவேளை விஜய் இந்தத் தொகுதியில் நின்றால் அமோக ஆதரவில் வெற்றி பெறுவார் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர் விசாலை மக்கள்.












Click it and Unblock the Notifications