உடுமலைப்பேட்டை சங்கர்! இன்றுடன் 10 ஆண்டுகளாச்சு! நாங்கள் என்ன தவறு செய்தோம்? கவுசல்யா உருக்கம்
சென்னை: உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகின்றன. எல்லாரையும் போல் நாங்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்க வேண்டும், நாங்கள் என்ன தவறு செய்தோம் என கவுசல்யா தனது பேஸ்புக்கில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேஸ்புக்கில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: சங்கர் ரத்த வெள்ளத்தில் கிடந்த போது நான் என்ன மனநிலையில் நின்றிருப்பேன். நானும் வெட்டப்பட்டேன். உயிர் இருந்தும் உயிரற்ற பிணம் போல அவன் உடல் பார்த்து நின்றேன்.

அந்தக் கெளசல்யா செத்துதான் போய்விட்டாள். இன்று போர்க்குணத்தோடு கருத்தியலோடு நிற்கிறேன். சங்கர்! காதலுக்காகத் தாஜ்மஹால் கட்டிய நாட்டில் நான் உனக்கான நீதியையாவது பெற்றுவிட மாட்டேனா! முடியும் என்னால் முடியும்.
இன்றோடு நாங்கள் வெட்டுப்பட்டு சங்கரை இழந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. எல்லாரையும் போல நாங்கள் மகிழ்வாக வாழ்ந்திருக்க வேண்டும். நாங்கள் என்ன தவறு செய்தோம்? சாதிக்காக எங்கள் வாழ்வையே அழித்துவிட்டார்கள்.
அதிலிருந்து தப்பிப் பிழைத்தாலும் காலம் கடந்தாலும் ஏதோ ஒரு ஓரமாக என்பாட்டுக்கு என் வாழ்வை என்னால் நடத்த முடியவில்லை. சங்கரின் இரத்தம், அவன் குரல் , வலி இன்றும் என்னோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு மூலையில் அமர்ந்து அழுது விட்டு மட்டும் செல்ல என்னால் இயலவில்லை.
சங்கர் நினைவை நான் ஏந்துவது சாதிக்கு எதிராய் அவனை உயிரோடு இங்கு உலவ விடுவதற்கே!
நாளை இன்னோர் சங்கர் கௌசல்யா உருவாகாமல் தடுப்பதற்கு அவனைக் கருவியாக்கிப் போராடுகிறேன். ஆனால் ஆணவக் குற்றங்கள் தொடர்ந்து கொண்டே உள்ளன.
தனிச்சட்டம் படைப்பதற்காக... சாதி ஒழிப்பிற்காக சங்கரை நெஞ்சிலேந்தி என் இறுதிவரை களத்தில் நிற்பேன். இது சங்கர் மேல் உறுதி! சங்கர்!!! என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications