கஞ்சா விற்ற 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை! சமூக விரோதிகளுக்கு சம்மட்டி அடி கொடுத்த தீர்ப்பு!
சென்னை: கஞ்சா விற்ற வழக்கில் 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம்.
சமூகத்தை சீர்குலைக்கும் வேலையில் ஈடுபட்டால் சட்டத்தின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பதற்கு இந்த தீர்ப்பு மிகச்சிறந்த உதாரணமாக அமைந்திருக்கிறது.
உழைத்து முன்னேற ஆயிரம் வழிகள் உள்ள நிலையில் குறுக்குப்புத்தியுடன் சுற்றித்திரியும் பலருக்கும் இந்த தீர்ப்பு ஒரு பாடமாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே தமிழகத்தில் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க அரசும், காவல்துறையும் அதிதீவிரமாக செயல்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.
இந்த வழக்கின் விவரம் வருமாறு;

7 ஆண்டுகளுக்கு முன்
சென்னை பல்லாவரத்தில் 56 கிலோ கஞ்சா விற்க முயன்ற வழக்கில், தேனியைச் சேர்ந்த நான்கு பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை ஜமீன் பல்லாவரத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து, கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி பல்லாவரம் போலீசார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர்.

56 கிலோ கஞ்சா
அங்கு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன், கதிரேசன், மணிமாறன் மற்றும் தெய்வம் ஆகிய நான்கு பேர் கஞ்சா பொட்டலங்களுடன் நின்றிருந்தனர். அவர்களை கைது செய்த போலீசார், 56 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களுக்கு எதிராக போதைப் பொருள் தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

கடும் தண்டனை
இந்த வழக்கை விசாரித்த சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற முன்பு விசாரணைக்கு வந்தது. சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜே.சரவணன் ஆஜராகி குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதால் உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலியட் புஷ்பா, வழக்கில் பாண்டியன் உள்பட நான்கு பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, நால்வருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

நீதிபதி வேதனை
அந்த தீர்ப்பில், போதைப்பொருள் பயன்பாடு என்பது ஒரு சமூக நோய் என்றும் போதைப்பொருள் கடத்தல் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்த்துவது மட்டுமல்லாமல், போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணம் பயங்கரவாதம் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். சமீப காலங்களில் இளம் பருவத்தினர் போதைப்பொருள் பயன்படுத்துவது ஆபத்தான விகிதத்தில் உள்ளதாகவும், இது ஒட்டுமொத்த சமூகத்திலும் கொடிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications