கோவிலம்பாக்கத்தில் 10 வயது சிறுமி மீது தண்ணீர் லாரி மோதியதால் பலி.. தாயின் கண் முன்னே நடந்த சோகம்
சென்னை: சென்னை கோவிலம்பாக்கத்தில் தண்ணீர் லாரி மோதிய விபத்தில் சிக்கி 10 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து இன்று பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் மீண்டும் திறந்தன. இதனால் காலை வேளையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஆங்காங்கே வாகனங்கள் நிற்பது வழக்கம்.

இது போல் சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடக்கும் விஷயம். அந்த வகையில் இன்று காலை சென்னை கோவிலம்பாக்கத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி லியோரா ஸ்ரீ (10) தனது தாயுடன் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு புறப்பட்டார்.
அப்போது வழியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் மெல்ல மெல்ல ஊர்ந்து வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. இந்த போக்குவரத்து நெரிசலில் லியோரா ஸ்ரீயின் இரு சக்கர வாகனமும் சிக்கியது. போக்குவரத்து சற்று சீராகி வாகனங்கள் ஒன்றாக புறப்படத் தயாரானது.
அப்போது லியோரா ஸ்ரீயின் தாயும் தனது வாகனத்தை இயக்கினார். அப்போது அவரது வாகனம் நிலைத்தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் கீழே விழுந்த லியோரா ஸ்ரீ மீது தண்ணீர் லாரியின் சக்கரம் ஏறியது. இதில் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார்.
இந்த விபத்தை ஏற்படுத்திய டிரைவர் சாலையிலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த கோவிலம்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தப்பியோடிய டிரைவரை தேடி வருகிறார்கள். தாயின் கண் முன்னே மகள் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications