கிளாம்பாக்கத்தை நோக்கி கிளம்பிய 100 பேருந்துகள்.. அமாவாசையில் சோதனை ஓட்டம்.. திறப்பு விழா எப்போது?
சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து 100 பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் அனுப்பி சோதனை ஓட்டமானது நடைபெற்றது. கார்த்திகை அமாவாசை தினமான இன்று சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ள நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தை பொங்கலுக்கு முன்பாக திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் இருந்தும் மற்ற மாநிலத்தில் இருந்தும் சென்னைக்கு பயணிக்கும் வாகனங்கள் அதிகரித்து வருகிறது. இதில் பேருந்து மூலம் பயணம் செய்பவர்கள் சென்னைக்கு வருகை தந்தால் கோயம்பேட்டில் உள்ள பேருந்து முனையத்தை மட்டுமே நாடி இருக்கவேண்டிய நிலை இருந்தது. இதனால் சென்னையின் புறநகரில் வசித்து வரும் பயணிகளுக்கு பேருந்து முனையத்திற்கு பயணம் செய்வதே சவாலாக இருந்தது.

இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, சென்னையில் அடுத்த பெரிய பேருந்து முனையத்தை கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 88 ஏக்கரில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகிறது. இங்கு வந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் மற்றும் புதிய புறநகர் ரயில் நிலையம் ஆகியவற்றை கட்டவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிட்டபடி 2 ஆண்டுகளில் முடிக்கப்பட்டு 2022ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் திறந்து இருக்க வேண்டும். ஆனால் கொரோனா பரவல் ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் கட்டுமான பணியில் தாமதம் ஏற்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த ஜனவரி மாதம் தை பொங்கலுக்கு திறக்கப்படும் என்று கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமைச்சர் சேகர்பாபு கூறினார்
சரியான திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்டதாக கூறி அதனை மாறுதல் செய்து கூடுதலாக நிதி செலவிட்டு கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு நாள் பெய்த மழைக்கு பேருந்து நிலையத்தின் முன்பு குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது. இதனை சரி செய்யும் பணியில் இறங்கிய சென்னை மாநகராட்சி வடிகால் அமைக்கும் பணியில் ஈடுபட்டது.
தினந்தோறும் 1.5 லட்சம் பயணிகளை கையாளும் வகையில் இந்த புதிய பேருந்து நிலையம் அனைத்து நவீன வசதிகளுடன் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 200 பஸ்கள் 270 கார்கள் மற்றும் 3500 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துவிட்டது.
அதேபோல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் வகையில் மாநகர பஸ்கள் இயக்கப்பட உள்ளது இதற்காக தனி இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று பொதுமக்கள் பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார். அதற்கு முன்னோட்டமாக கார்த்திகை அமாவாசை தினமான இன்று 100 பேருந்துகளை இயக்கி சோதனை ஓட்டமானது நடைபெற்றது. வண்டலூர் உயிரியியல் பூங்காவில் இருந்து 100 பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் அனுப்பி சோதனை ஓட்டமானது நடைபெற்றது.
மீண்டும் வெளியே வந்து ஊரப்பாக்கம் வழியாக சென்று கிளாம்பாக்கம் வரும் அரசு பேருந்துகளின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதன் காரணமாக விரைவில் இது தொடர்பாக நல்ல செய்தி வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சோதனை ஓட்டத்தை அதிகாரிகள் குழு சார்பில் கண்காணிக்கப்பட்டது.
பொங்கல் பண்டிகைக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட வேண்டும் என்பதே சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications