100% மாஸ்க் அணிந்து; 100 சதவீதம் வாக்குகளை பதிவு செய்யுங்கள்.. மக்களுக்கு தமிழிசை வேண்டுகோள்!
சென்னை: புதுவை மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விருகம்பாக்கத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
மக்கள் 100 சதவீதம் மாஸ்க் அணிந்து, 100 சதவீதம் வாக்குகள் பதிவாக வேண்டும் என்று தமிழிசை கேட்டுக் கொண்டார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்கு செலுத்தி வருகின்றனர். சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விருகம்பாக்கத்தில் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
பின்னர் நிருபர்களிடம் கூறிய தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:- இன்று நமது நாட்டுக்கு ஒரு பெருமைமிகு தினமாகும்.
தமிழ்நாட்டு வாக்காளர் என்ற முறையில் நானும், எனது கணவரும் வாக்களித்துள்ளோம். புதுவை மாநில நிலைமையை கண்காணிக்க அங்கு விரைந்து கொண்டிருக்கிறேன். 100 சதவீதம் வாக்குகள் பதிவாக வேண்டும். அதே வேளையில் மக்கள் 100 சதவீதம் மாஸ்க் அணிந்து வாக்களிக்க வேண்டும். வாக்களிக்க வருபவர்கள் தயவுசெய்து முகக்கவசம் அணிந்து வாருங்கள் என்று கூறினார் தமிழிசை சவுந்தரராஜன்.