காற்று மாசு... எலக்ட்ரிக் கார், பைக் வாங்கினால் 100% வரி விலக்கு - அரசாணை
பேட்டரி மூலம் இயங்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 100% வரி விலக்கு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை: காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இ வெகிக்கிள் எனப்படும் மின்சாரம் மூலம் இயங்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 100% வரி விலக்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்துடன் அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
காற்று மாசை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. சுற்றுப்புறச் சூழல்களை பாதுகாத்து, காற்று மாசுபடுவதை குறைக்கிற வகையில், மின்சாரத்தில் இயங்கிடும் வாகனங்களை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசால், தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை-2019 கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை 2019ன்படி, அனைத்து மின்சார இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள், பேருந்துகள் மற்றும் இலகு ரக சரக்கு வாகனங்கள் ஆகியவற்றிற்கு 100 சதவிகித மோட்டார் வாகன வரி விலக்கு வழங்கப்படும். இந்த வரி விலக்கு, 2022-ம் ஆண்டு இறுதி வரை வழங்கப்படும்.
மின்சார வாகனங்கள், அதன் உதிரி பாகங்கள் மற்றும் மின்கலன் (பேட்டரி) அதற்கான மின்ஏற்று உபகரணங்களை உற்பத்தி செய்வோருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும். ரூ.50 கோடிக்கு மேல் முதலீடு செய்தும், குறைந்தபட்சம் 50 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகள் பெற தகுதி பெறும்
அமெரிக்க அதிபர் தேர்தல்: எப்போது நிறைவடையும் வாக்குப்பதிவு.. ரிசல்ட் வெளியாவது எப்போது?
அந்த வகையில் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து பேட்டரி வாகனங்களுக்கு 50% வரி விலக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பேட்டரி மூலம் இயங்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 100% வரி விலக்கை அறிவித்துள்ளது தமிழக அரசு. அத்துடன் அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வரி சலுகையானது வரும் 2022ஆம் ஆண்டு இறுதி வரை அமலில் இருக்கும் என்பதால் பொதுமக்கள் பேட்டரி வாகனங்களை வாங்கலாம் என்று போக்குவரத்து துறை ஆணையர் கூறியுள்ளார்.