இன்று கோவை, ஈரோடு, சேலத்தில் மழை உறுதி.. 6 மாவட்டங்களுக்கு வானிலை மையம் குட்நியூஸ்
கோவை: தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் இருந்து தெற்கு கடலோர ஆந்திராவின் மேல் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடுமையான கோடைவெயிலை குறைக்கும் வண்ணம், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. கோவை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக நல்ல மழை பெய்தது.

இநநிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், " மேற்கு மத்திய பிரதேசம் முதல் தெற்கு உள் கர்நாடகம் வரை, மத்திய மராட்டியம், மராத்வாடா மற்றும் வட உள் கர்நாடகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை ஏற்பட்டுள்ளது.
மேலும், தெற்கு கடலோர ஆந்திர பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் இருந்து தெற்கு கடலோர ஆந்திராவின் மேல் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. ஏனைய தமிழகத்திலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இதேபோல, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 23-ந்தேதி வரையில் வட உள் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று வேலூரில் 102.2 டிகிரி வெயில் பதிவாகியது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை சின்னக்கல்லார், திண்டுக்கல் அய்யலூரில் தலா 9 செ.மீ., திருச்சி வையம்பட்டியில் 7 செ.மீ மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே அடுத்த 2 மணி நேரத்தில் நீலகிரி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் இன்று காலை கணித்துள்ளது. சென்னையிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளது.














Click it and Unblock the Notifications