அடேங்கப்பா... டிஎன்பிஎஸ்சி குரூப்2, குரூப் 2ஏ பதவிகளுக்கு 11.61 லட்சம் பேர் விண்ணப்பம்
இதுவரை இல்லாத அளவிற்கு குரூப்2, குரூப் 2ஏ பதவிகளுக்கு 11.61 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: குரூப் 2, குரூப் 2ஏ பதவியில் காலியாக உள்ள 5,529 பணியிடங்களுக்கு மொத்தம் 11 லட்சத்து 61 ஆயிரத்து 227 பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் 11,786 பேரின் விண்ணப்பங்கள் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கான ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள்தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் இந்த ஆண்டு குரூப் 2 பதவிக்கு 116 பணியிடம். நேர்முகத் தேர்வு அல்லாத குரூப் 2ஏ பதவியில் 5,413 இடங்கள் என மொத்தம் 5,529 காலி பணி இடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கியது.
இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் என அனைவரும் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். மார்ச் 23ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. கடைசி நாளில் ஏராளமானோர் விண்ணப்பிக்க முயற்சித்ததால், பலருக்கும் ஒன் டைன்ம் ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய முடியாமல் போனதாக புகார் எழுந்தது. விண்ணப்பிக்க நாள் நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் மார்ச் 23ஆம் தேதியுடன் ஆன்லைன் விண்ணப்பம் நிறைவடைந்தது
இருப்பினும் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை புதிய சாதனையை படைத்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன், டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ பதவியில் காலியாக உள்ள 5,529 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 1 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டதாகவும், நேற்று முன்தினம் (மார்ச் 23) இரவு 12 மணி வரை மொத்தம் 11 லட்சத்து 61 ஆயிரத்து 227 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 11,786 பேரின் விண்ணப்பங்கள் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications