அடேங்கப்பா.. 4 விசாரணை கமிஷன்களுக்கு இத்தனை கோடி செலவா? ஆர்டிஐ கேள்வி மூலம் வெளிவந்த ஷாக் தகவல்!
சென்னை: தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட 4 விசாரணை ஆணையங்களுக்காக இதுவரை ரூ. 11.17 கோடி செலவானதாக ஆர்டிஐ மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான கார்த்திக் என்பவர், தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையங்கள் பற்றியும், அவற்றிற்கான செலவு பற்றியும் ஆர்டிஐ சட்டத்தின் வாயிலாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த 13 ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்காக 4 விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு 5.60 கோடி செலவாகியுள்ளது. இந்த ஆணையம் சில மாதங்களுக்கு முன்னர், தங்கள் அறிக்கையைச் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி இளவரசன் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி சிங்காரவேலு ஆணையத்திற்கு ரூ.2.17 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. 2011 பரமக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் விசாரணை நடத்திய நீதிபதி சம்பத் ஆணையத்திற்கு ரூ. 82.64 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ராஜேஸ்வரன் ஆணையத்திற்கு இதுவரை ரூ. 2.57 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications