ஆபரேஷன் கந்துவட்டி! வசூல்ராஜாக்கள் அட்ராசிட்டியை ஒடுக்க முடிவு! ஐ.ஜி.பாலகிருஷ்ணன் அதிரடி நடவடிக்கை!
சென்னை : திருச்சி மத்திய மண்டலத்தில் கந்துவட்டி வசூலித்த 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ள நிலையில், ஆப்ரேசன் கஞ்சா போல ஆப்ரேசன் கந்துவட்டி நடவடிக்கை இருப்பதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கடலூரை சேர்ந்த செல்வக்குமார் என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பட்டாலியனில் காவலராக பணியாற்றி வந்தார். குடும்ப செலவுக்காக ஒரு பெண்ணிடம் ரூ.5 லட்சம் கந்து வட்டிக்கு கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்திவிட்டதாக கூறப்படுகிறது.
கருமுட்டை விற்பனை! கடிவாளம் போட்ட தமிழக அரசு! முறைகேடு செய்தால் இனி இத்தனை வருசம் 'கம்பி’ தான்.!
ஆனாலும் அந்த பெண் மீண்டும் பணம் கேட்டு மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த போலீஸ்காரர் செல்வகுமார் கந்துவட்டி கொடுமையால் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

கந்துவட்டி புகார்
இது தொடர்பாக அப்பெண் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கந்துவட்டி தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் கந்துவட்டி கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழகம் முழுவதும் ‛ஆபரேஷன் கந்துவட்டி' என்ற பெயரில் தீவிர நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், சிட்டி கமிஷனர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இந்நிலையில் திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த ஆண்டில் கந்துவட்டி வசூலித்த 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

119 பேர் கைது
இதுகுறித்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழக டி.ஜி.பி. உத்தரவின்பேரில், கந்துவட்டி மூலம் மக்கள் உயிரிழப்பை தடுப்பதற்கும், பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் ஆபரேஷன் கந்துவட்டி என்ற சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி கந்துவட்டி சம்பந்தமாக வரும் புகார்களுக்கு உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்டங்களில் கந்துவட்டி வசூல் தொடர்பாக 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீடுகளில் சோதனை
39 வீடுகளில் சோதனை செய்யப்பட்டு சொத்துப்பத்திரங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இதுவரை கந்துவட்டி தொடர்பான 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், பொதுமக்களை ஏமாற்றிய நபர்களின் வீட்டில் சோதனை மேற்கொண்டு, வெற்று ஆவணங்கள் மற்றும் சொத்து பத்திரங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கடும் எச்சரிக்கை
மேலும், கைது செய்யப்படாத குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதற்கும், கந்துவட்டி சம்பந்தமான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் வீடுகளில் சோதனை செய்வதற்கும் துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கந்துவட்டி புகார்கள் எவர் மீதேனும் வந்தால் சட்டப்படியாக துரிதமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.