“கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட்”.. CSK போட்டியின்போது 12 பேரை கொக்கி போட்டு தூக்கிய போலீசார்!
சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற CSK - LSG போட்டியின்போது கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் சென்னை உட்பட நாட்டின் பல நகரங்களில் நடைபெற்று வருகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 39-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, ருதுராஜ் கெய்க்வாட் சதத்தின் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வென்றது லக்னோ.
சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் தீவிர ரோந்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பிளாக்கில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 12 பேரை கைது செய்துள்ளனர்.
சென்னை - லக்னோ ஆட்டத்தின்போது, கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்யும் நபர்களை தொடர்ச்சியாக கண்காணித்து வந்த போலீசார், டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்ததாக மொத்தம் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 56 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடும் போட்டிகளை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வரும் நிலையில், அதனை பயன்படுத்தி பிளாக்கில் மிக அதிக விலைக்கு டிக்கெட் விற்பது போன்ற நடவடிக்கைகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தொடர்ச்சியாக புகார்கள் எழும் நிலையில், போலீசார் தீவிரமாக கண்காணித்து 12 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும், சினிமா டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் பிரபல டிக்கெட் விற்பனை இணையதளத்தின் பெயரில் அதேபோன்று போலியாக இணையதளம் உருவாக்கி ஐபிஎல் டிக்கெட்டுகள் விற்பனை செய்து மோசடி செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications