பள்ளிகள் இல்லாத ஊரே இருக்கக்கூடாது என எண்ணியவர் காமராஜர்! கர்மவீரரின் கதை இது!
சென்னை: கர்மவீரர் என்றழைக்கப்படும் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பள்ளிகள் இல்லாத ஊரே இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் ஊர்தோறும் அரசு பள்ளிகளை தொடங்கி மதிய உணவுத் திட்டத்தையும் கொண்டு வந்தவர் காமராஜர்.
இதேபோல் விவசாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் அணைகள் பலவற்றை கட்டிய பெருமைக்கு சொந்தக்காரர் காமராஜர்.

விருதுநகர் மாவட்டம்
விருதுநகரில் குமாரசாமி - சிவகாமி தம்பதியினருக்கு 1903-ஆம் ஆண்டு ஜூலை 15 அன்று மகனாக பிறந்தார் காமராஜர். காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் அறிமுகத்தால் 1919 ஆம் ஆண்டு முதல் பல்வேறு சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டார். 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற உப்புச் சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றார். இதனைத் தொடர்ந்து அரசியல் பணியில் ஈடுபட்டு வந்தார்.

காங்கிரஸ் கட்சி
1936 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளராகவும், 1937 மற்றும் 1946 ஆம் ஆண்டுகளில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினராகவும், 1941 ஆம் ஆண்டு விருதுநகர் நகர்மன்றத் தலைவராகவும், 1952 ஆம் ஆண்டு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பல்வேறு பொறுப்புகளில் சிறந்து விளங்கி மக்கள் பணியில் ஈடுபட்டு வந்தார் காமராஜர்.

சட்டமன்ற உறுப்பினர்
மேலும், 1954 ஆம் ஆண்டு குடியாத்தம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற காமராஜர் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். தன்னுடைய அயராத உழைப்பினால் ஆட்சியில் சிகரம் தொட்ட கர்மவீரர் காமராஜர், தனது 9 ஆண்டு கால ஆட்சியில் கிராமங்கள் தோறும் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கி வைத்து கல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்கினார். ஏழை மாணவர்கள் பள்ளிகளில் கல்வி கற்பதற்கு ஏற்ப, இலவச மதிய உணவுத் திட்டத்தினைக் கொண்டு வந்தார்.

மதிய உணவு
தமிழ்நாட்டில் பள்ளிகள் இல்லாத ஊரே இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் கல்வி வளர்ச்சிக்கு அரும் பெரும் தொண்டாற்றினார். விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் வளர்ச்சியடையச் செய்வதற்கு பெரும் பங்காற்றினார். மேலும், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அணைகள் கட்டி விவசாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். 1964 ஆம் ஆண்டு மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற காமராஜர், நேருவின் மறைவிற்குப் பின்னர் இந்தியாவின் பிரதமரை இரண்டு முறை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

73 ஆண்டுகள்
தான் வாழ்ந்த 73 ஆண்டுகளில் 57 ஆண்டுகள் தமிழ்நாட்டு மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்த ஒப்பற்றத் தலைவராக விளங்கினார்.
வாய்மை, தூய்மை, நேர்மை, எளிமை, அடக்கம் ஆகியவற்றுக்கு உதாரணமாகத் திகழ்ந்த காமராசரின் மறைவுக்குப் பிறகு 1976 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, நினைவு அஞ்சல் தலையும் வெளியிடப் பட்டது.

காமராஜருக்கு சிறப்பு
விருதுநகரில் காமராஜர் வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசினால் அரசுடைமையாக்கப்பட்டு, நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், சென்னை தியாகராய நகரில் காமராசர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டு அரசு பராமரித்து வருகிறது. மேலும், திமுக தான் ஆட்சியில் சென்னையிலுள்ள கடற்கரை சாலைக்கு 'காமராஜர் சாலை' என்றும், சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயரும் சூட்டப்பட்டது.












Click it and Unblock the Notifications