செம குட் நியூஸ் சொன்ன டிஎன்பிஎஸ்சி.. 15 நாட்களில் மட்டும் 1,253 பேருக்கு அரசு வேலை கிடைத்துள்ளதாம்!
சென்னை: இந்த ஆண்டு பிப்ரவரி 1 முதல் 15 வரையிலான கடந்த 15 நாட்களில் மட்டும் 1,253 பேர், அரசுப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, பணி நியமனங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் அந்தந்த குரூப் பணிகளுக்கான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி, தகுதி வாய்ந்த நபர்களைத் தேர்வு செய்து வருகிறது.

டிஎன்பிஎஸ்சி: கடந்த சில ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் பல உறுப்பினர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய பதவிகளே காலியாக உள்ளதால், அரசு துறைகளின் காலி பணியிடங்களை நிரப்பும் டிஎன்பிஎஸ்சி-யின் நடைமுறையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகத் தேர்வர்கள், எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
குரூப் 4, குரூப் 2 உள்ளிட்ட தேர்வுகளின் முடிவுகள் வெளியாவதிலும் தாமதம் ஏற்பட்டது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் குரூப் 4 தேர்வு முடிவுகள் கூட, 8 மாதங்கள் கழித்தே வெளியாகின. அதேபோல குரூப் 2 தேர்வு முடிவுகளும் நீண்ட தாமதத்துக்குப் பிறகே வெளியாகின.
15 நாட்களில் மட்டும் இவ்வளவு பேர் பணிக்கு தேர்வு: டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் ஆமை வேகத்தில் செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி (நேற்று) வரையிலான 15 நாட்களில் மட்டுமே 1,253 பேர், அரசுப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ள தகவலில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த 01.02.2024 முதல் 15.02.2024 வரையிலான காலத்தில் உரிமையியல் நீதிபதி பதவிக்கு 237 நபர்களும், உதவி நிலவியலாளர் பதவிக்கு 40 நபர்களும், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய உதவிப் பொறியாளர் (கட்டிடவியல்) உள்ளிட்ட பதவிகளுக்கு 752 நபர்களும், உதவிப் புள்ளியியல் ஆய்வாளர் பதவிக்கு 190 நபர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அந்தவகையில், பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப மொத்தம் 1,253 நபர்கள் இந்த பிப்ரவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்திற்கு இன்று 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ஸ்டாலின் கொடுத்த உறுதி: இதற்கிடையே, மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ், டிஎன்பிஎஸ்சி மூலம் பல்வேறு காலி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 1,598 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கினார்.
தேர்தல் நடத்தை விதிகளால்.. போட்டித்தேர்வு நடத்துவதில் தாமதமா? டிஎன்பிஎஸ்சி சொல்வது என்ன?
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இளைஞர்களுக்கு அதிகமாக வேலைவாய்ப்பை உருவாக்கி வருகிறோம். இதுவரை 60 ஆயிரத்து 567 இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. டிஎன்பிஎஸ்சி மூலம் 27 ஆயிரத்து 858 பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் 50 ஆயிரம் புதிய பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் தான் இன்று 1,598 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளேன்” எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications