பறந்து வந்து சிறுவனின் உயிரை வாங்கிய பட்டம்.. மகனை இழந்த வேதனையிலும் பெற்றோர் செய்த நெகிழ்ச்சி செயல்
சென்னை : சென்னையில் பட்டம் பிடிக்கச் சென்று மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த 13 வயது சிறுவனின் கண் மற்றும் நுரையீரல் தானமாக வழங்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளைமேடு அருகேயுள்ள பாரதியார் தெருவைச் சேர்ந்த பள்ளி மாணவன் பிரசன்னா. 13 வயதான பிரசன்னா தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது வானில் பறந்துகொண்டிருந்த பட்டம் ஒன்றின் நூல் அறுந்து விழுந்துள்ளது.
இதனையடுத்து அறுந்து விழுந்த பட்டத்தை எடுப்பதற்காக பிரசன்னா ஒரு மாடியிலிருந்து, மற்றொரு மாடிக்கு ஏறிக் குதித்தபோது கால் தடுமாறி எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளார். 2வது மாடியில் இருந்து பிரசன்னா கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினரும், சிறுவன் பிரசன்னாவின் குடும்பத்தினரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே மாணவன் பிரசன்னா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மகன் இறந்த சோகத்திலும் உடல் உறுப்புகளை தானமாக வழங்க பிரசன்னாவின் பெற்றோர் முன்வந்தனர்.
உயிரிழந்த சிறுவன் பிரசன்னா, தன்னுடைய உடல் உறுப்புகளை தானமாக வழங்க விரும்பியுள்ளார். அகாலமாக மரணமடைந்த தங்கள் மகனின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், அவரது பெற்றோர், பிரசன்னாவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
இதையடுத்து, சிறுவன் பிரசன்னாவின் கண் மற்றும் நுரையீரல் ஆகியவற்றை தானமாக வழங்கியுள்ளனர். மகன் உயிரோடு இல்லை என்றாலும், அவனது கண்ணும், நுரையீரலும் உயிர்ப்புடன் இருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். குழந்தைகளை பெற்றோர் பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்றும் சிறுவனின் பெற்றோர் உருக்கமாகத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications