தென் மாவட்டங்களில் 141 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்.. தென்மண்டல ஐஜி உத்தரவு! காரணம் இதுதான்
மதுரை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி தென்மண்டலத்தில் 141 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 141 காவல் ஆய்வாளர்களை டிரான்ஸ்பர் செய்யும் பட்டியலுக்கு தென்மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் ஒப்புதல் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. லோக்சபா தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார்.

தேர்தலை முன்னிட்டு காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் பணியிட மாற்றம் பட்டியலை தயாரிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி சொந்த ஊரில் அல்லது ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளாக பணிபுரியும் போலீசார் பட்டியலை தயாரித்து அனுப்புமாறு சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தி இருந்தார். தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி பணி மாறுதல் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டன.
மக்களவைத் தேர்லையொட்டி தென்மாவட்டங்களில் 141 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் செய்து, தென்மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் உத்தரவிட்டுள்ளார். தென்மண்டல அளவில் தயாரிக்கப்பட்ட பணி மாறுதல் குறித்த பட்டியல் அடிப்படையில் முதல்கட்டமாக 141 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து தென் மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் பிறப்பித்துள்ளார்.
மதுரை நகர், மதுரை சரகம் (மதுரை, விருதுநகர்), திண்டுக்கல் சரகம் (திண்டுக்கல், தேனி), ராமநாதபுரம் சரகம் (ராமநாதபுரம், சிவகங்கை) ஆகிய இடங்களில் இருந்து சட்டம், ஒழுங்கு, போக்கு வரத்து உள்ளிட்ட பிரிவுகளை சார்ந்த 80 காவல் ஆய்வாளர்களும், நெல்லை மாநகர், நெல்லை சரகம் மற்றும் மதுரை நகர், மதுரை சரகம், ராமநாதபுரம் சரகத்தில் இருந்து சுமார் 61 ஆய்வாளர்களும் முதல் கட்டமாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே நேரத்தில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மட்டும் சுமார் 141 இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தந்த சரக டிஐஜி அலுவலகங்கள் மூலம் உரிய காலி பணியிடங்களில் நியமிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications