ஸ்டாலினுடன் அமெரிக்கா போகும் 17 பேர்! 30 நாட்கள் ப்ளான்! விரைவில் செல்வப்பெருந்தகை ஃபைல்ஸ்!
சென்னை: முதல்வர் ஸ்டாலின் 30 நாட்கள் பயணமாக அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் செல்வப்பெருந்தகை பற்றி அண்ணாமலை சில ஆவணங்களை வெளியிட இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், அரசு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒன்று வெளியாகவே இல்லை. அவருக்குப் பதிலாகப் பொறுப்புகளைக் கவனிக்க உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அமர்த்தப்படுவார் என்றும் பேச்சுகள் அடிபடுகின்றன.

இது குறித்து ஒரு யூடியூப் சேனலுக்கு டெல்லி மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். கூடவே அண்ணாமலைக்கும் செல்வப்பெருந்தகைக்கும் இடையே நடந்து வரும் பனிப் போர் குறித்தும் சில ரகசியங்களைப் போட்டு உடைத்துள்ளார்.
செல்வப்பெருந்தகை சர்ச்சை தொடர்பாக ராஜகோபாலன் பேசுகையில், “எப்படி திமுக ஃபைல்ஸ் என அண்ணாமலை வெளியிட்டாரோ அதே மாதிரி செல்வப்பெருந்தகை பற்றிய ஃபைல் ஒன்றையும் வெளியிடப் போகிறார். அதற்காக அமித்ஷா மூலம் செல்லவப்பெருந்தகைப் பற்றிய குற்ற ஆவணங்களைத் திரட்டி வருகிறார். அப்படி ஒரு ஃபைல் வெளியானால் தமிழ்நாட்டில் ஒரு புதிய தலைவரை ராகுல் காந்தியும் மல்லிகார்ஜுன கார்கேவும் நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அதற்கான ரகசிய ஆவணங்களை அமித்ஷா மூலம் அண்ணாமலை பெற்றிருக்கிறார். மொத்தம் 8 பக்க அறிக்கை இப்போது அண்ணாமலை கையில் உள்ளது. அதாவது Peon to Politician என்ற தலைப்பில் அந்த ஆவணம் டெல்லியிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. அவர் ரிசர்வ் பேங்கில் பியூன் ஆக தான் வேலை பார்த்தார். ஆகவே, அவரைப் பற்றிய விசயங்களை அங்கேயும் திரட்டி உள்ளனர். அதை எல்லாம் வைத்து செல்வப்பெருந்தகை ஃபைல் ஒன்று, இரண்டு என வெளியிட உள்ளார் அண்ணாமலை.
அடுத்ததாக மாயாவதி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மாயாவதி இந்தியில் 3 பக்கம் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில், தமிழ்நாடு அரசு தலித் விரோத அரசு என்று குற்றஞ்சாட்டி இருக்கிறார். ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்டிருக்கிறார். அகிலேஷ் யாதவ் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் நெருக்கமாக உள்ளார் என்பது பலருக்கும் தெரியும்.
எனவே உத்தரப்பிரதேச அரசியலைச் சமாளிக்க மாயாவதி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் நல்ல நட்புறவுடன் இருந்து வருகிறார். அவரது உதவியால்தான் பாஜக 19 தொகுதிகளில் வெற்றி பெற முடிந்தது.
ஆகவே ஆம்ஸ்ட்ராங் விசயத்தில் மாயாவதியின் கோரிக்கையை அமித்ஷா நிறைவேற்றுவார். அப்படி நடந்தால், அது திமுக அரசுக்கு தலைவலியாக முடியும். எனவே ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தை மாயாவதி விடமாட்டார்” என்று சொன்னவர் அதிமுக ஒருங்கிணைப்பு பிரச்சினைப் பற்றியும் சில விசயங்களைக் கூறியுள்ளார்.
அதாவது, அதிமுக ஒருங்கிணைப்பு என்பதே அமித்ஷா போட்டுக் கொடுத்த திட்டம்தான் என்றும் மூன்று பேரும் இணைந்தால், என்ன மாதிரியான சமரசங்களைச் செய்து கொள்ளலாம் என்பது பற்றி 3 விதமான யோசனைகளை அமித்ஷா கொடுத்துள்ளதாகவும் ராஜகோபாலன் கூறியுள்ளார். இந்த விவகாரம் இப்போது சர்ச்சையாக மாறி உள்ளதற்கு அமித்ஷாதான் பின்னணியாக இருக்கிறார் என்றும் தீபாவளிக்குள் கட்சி ஒன்றாகிவிடும் என்றும் அவர் நம்பிக்கை அளித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம் பற்றிப் பேசிய ராஜகோபாலன், “மத்திய அரசு ஸ்டாலின் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கிவிட்டது. அங்கே சென்று அவர் சில முதலீடுகளை ஈர்க்க இருக்கிறார். அவர் அமெரிக்காவில் 30 நாட்கள் தங்கி இருப்பார் எனத் தெரிகிறது. அதனிடையே அவர் தனது மகனைத் துணை முதல்வராக்கி விடுவார். அதன் மூலம் உள்துறை அவரது கட்டுப்பாட்டில் செயல்படும். முதல்வருடன் மொத்தம் 17 பேர் செல்கிறார்கள்.
மேலும் சென்னையில் முதலீட்டை ஈர்க்க ஒரு ரோட் ஷோ நடத்தவும் மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளார்” என்றவர் மற்றொரு ரகசியத்தையும் கூறியுள்ளார். அதாவது கவுதம் அதானி மகன் சில தினம் முன்பாக சென்னை வந்துள்ளார். அவர் சில முக்கியமான திமுக தலைவர்களைச் சந்தித்துப் பேசி இருக்கிறார் என்ற ஒரு தகவல் அவர் சொல்லி இருக்கிறார்.
அது தொடர்பாக டெல்லி ராஜகோபாலன் பேசுகையில், “கவுதம் அதானி மகன் தமிழ்நாட்டுக்கு வந்ததற்கு முக்கிய காரணம், பரந்தூர் விமானநிலையம் பற்றி விவாதிப்பதற்காகத்தான். அவர் ஒப்பந்தப்புள்ளிக்கு விடாமல், வேலைகளை தங்களிடம் ஒப்படைக்குமாறும், நிலங்களைக் கையகப்படுத்துவதை எல்லாம் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று ஆட்சியாளர்களிடம் சொல்லி இருக்கிறார். ஆனால், அரசு விதிமுறை அதற்கு இடமளிக்காது.
எனவே ஷரத்துகளை மாற்றி அமைக்கும்படி திமுக முதல் குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளியிடம் கவுதம் அதானி மகன் கூறியுள்ளார். இதுவரை முதல்வர் குடும்பத்தின் முக்கிய புள்ளியை இது தொடர்பாகப் பல முறை சந்தித்துவிட்டார் கவுதம். திமுகவில் மூத்த எம்பி ஒருவர் உள்ளார்.
அவரது மகன் திமுக அமைச்சரவையில் மந்திரியாக உள்ளார். அவர்கள் மூலமாகத்தான் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. இந்த ரகசிய சிந்திப்பு 3 மணிநேரம் நடந்துள்ளது” என்று பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications